PUBLISHED ON : ஏப் 07, 2015
'பர்சனாலிட்டி' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆளுமை. ஆளுமை என்பது பலவிதமான பண்புகள் அல்லது குணங்களின் தொகுப்பு. தாராளம், கஞ்சத்தனம், அமைதி, நம்புதல், சந்தேகப்படுதல், நிதானம், அவசரம், கோபம், சாந்தம் என்று பலவகையான குணங்கள் உள்ளன. அடிப்படையில் நான்கு குணங்கள், அவற்றின் பன்மடங்காக 64 குணாதிசயங்கள் சொல்லப்படுகின்றன. அனைத்து குணங்களையும் உள்ளடக்கியதுதான், ஆளுமை.
நற்குணங்கள் என்றும், நற்பண்புகள் என்றும் சிலவற்றை தரம் பிரிக்கிறோம். வக்கிர குணம் என்று சிலவற்றை தரம் தாழ்த்துகிறோம்.
ஆத்திரம், கோபம், வெறுப்பு, சந்தேகம், நம்பிக்கையின்மை ஆகியவற்றை குறையாக கருதுகிறோம். அன்பு காட்டுதல், நம்பிக்கை கொள்ளுதல், பொறுமை ஆகியவற்றை நிறையாக பறைசாற்றுகிறோம். இது தவறான அணுகுமுறை.
சந்தேகப்பட வேண்டிய நேரத்தில் சந்தேகப்படவும் தெரிய வேண்டும்; பயப்பட வேண்டிய நேரத்தில் பயப்படவும் வேண்டும்; ஆத்திரப்பட வேண்டிய நேரத்தில் ஆத்திரப்படவும் தெரிய வேண்டும்; அப்போதுதான் ஆபத்தை தவிர்க்க முடியும். எல்லோரையும் நம்பினால் ஏமாந்து விடுவோம். எனவே அனைத்து குணாதிசயங்களும் வேண்டும். தேவையில்லாத குணாதிசயங்கள் என்று எதுவுமே இல்லை.
தேவையில்லாத நேரத்தில், சம்பந்தமில்லாமல் வெளிப்படும் குணங்கள் தான், சங்கடத்தை விளைவிக்கின்றன. குணாதிசயங்களை வெளிப்படுத்துவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும், கட்டுப்படுத்துவதிலும் தான், நமது ஆளுமை வெளிப்படும். நமது குணங்களை ஆளத்தெரிய வேண்டும்; இல்லையென்றால் ஆளுமை குறைபாடுகள் ஏற்படும்.
- மா. திருநாவுக்கரசு,
மனநல மருத்துவர், மனநலம் கிளினிக்
94440 34647
