PUBLISHED ON : ஜூலை 17, 2016

குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு; குறைக்கும் கருணைக் கிழங்கு எனும் சித்தர்களின் வாக்கின் மூலம், இதை அறிந்து கொள்ளலாம். கொடி இடையுடன் இருந்த பெண்கள், இன்று கொழுப்பு, தைராய்டு சுரப்பு குறைவு உள்ளிட்டவற்றால் உடல் பருமனுடன் காட்சியளிக்கின்றனர். தைராய்டு சுரப்பு குறைவாக உள்ள பெண்களுக்கு, கருப்பை கோளாறு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற, காலதாமதம் ஆகிறது. மாதவிடாய் கோளாறும் தொடர் கதையாக தொடர்கிறது.
தைராய்டு சுரப்பு குறைவை சரியாக்கி, 30 நாட்களில் குணமாக்கும் சித்த மருந்துகள் உண்டு. ரத்த சோகை, மாதவிடாய் தடையால் ஏற்படும், உடல் ஊதலுக்கு தனி மூலிகை மருந்துகள் தேவை. குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு; குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு என்ற மூலிகை மணி வாசகப்படி, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு உயர்வை தருகிறது. உடல் பருமன் அதிகரித்து, மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும், உடல் பருமன் அதிகமுள்ளோர், தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது, கருணைக் கிழங்கு ஆகும்.
பொதுவாக ஐந்தரை அடி உயரமுள்ளோர், அறுபத்தைந்து கிலோ எடை இருக்க வேண்டும். இரண்டு மாதங்கள் தொடர்ந்து கருணைக் கிழங்கை சாப்பிட்டால், கனத்த உடல் கரைந்திடும் உயர்வை உணர்வீர்கள். உடல் பருமனால் உடல் உறுப்புகள் இரு பங்கு செயல்படும் நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு வரும் மூட்டு வலி, மூச்சிறைப்பு ஆகியவை குணமாக, கால தாமதமாகிறது.
உடல்பருமன் உள்ளோர், உணவில் வாழைத்தண்டு சூப், முருங்கைக் கீரை காம்பு சூப், முட்டைகோஸ் சூப், கொள்ளு கஞ்சி போன்ற திரவ உணவுகளை தினசரி உணவில் சாப்பிட வேண்டும். தொட்டுக் கொள்ள கருணைக் கிழங்கு புளிக்குழம்பு, கீரைத்தண்டு சாம்பார் பயன்படுத்தவும். நொறுக்குத் தீனி தின்பதை நிறுத்த வேண்டும். அடிக்கடி காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும். தண்ணீர் குடிக்க தடை இல்லை. அதிக ரத்தக் கொதிப்பு உள்ளோர், சீரகம் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டிய நீர் குடித்தால் நல்லது. தேங்காய், நிலக்கடலை, தயிர், அசைவ உணவுகள், உருளைக் கிழங்கு, பூசணிக் காய், கோழி முட்டை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
குண்டாக இருப்பவர்கள், சாப்பிடும் முன், தண்ணீர் ஒரு லிட்டர் குடிக்கவும். காலையில் எழுந்தவுடன் வெந்நீர், இருநூறு மில்லியில் இரண்டு ஸ்பூன் தேன் (பத்து கிராம்) கலந்து குடிக்கவும். சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் உணவில் சேர்க்கவும். கடலை எண்ணெய், நெய், டால்டா நீக்கவும். தினசரி மதிய உணவில் கருணைக் கிழங்கு முன்னூறு கிராமுக்கு குறையாமல், சமைத்து சாப்பிடவும். ஊறவைத்த அவல் காலையும், இரவும் சாப்பிடவும். மதியம் வெள்ளரிப்பிஞ்சு மட்டும் சாப்பிட்டால் உடல் எடை விரைவில் குறையும்.
பொன்னாங்கன்னிக் கீரையை, மிளகு போட்டு தாளித்து பயன்படுத்தினால் உடல் எடை குறையும். தொட்டுக் கொள்ள கீரைகளை பயன்படுத்தவும். இம்முறைப்படி தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட்டால், மாதம் ஐந்து கிலோ எடை குறையும்.
