கேள்வி - பதில்:பேன், பொடுகு இல்லே... அரிப்பும் தாங்கலே
கேள்வி - பதில்:பேன், பொடுகு இல்லே... அரிப்பும் தாங்கலே
PUBLISHED ON : ஜூலை 10, 2011

எனக்கு தலையில் பேன், பொடுகு கிடையாது. ஆனாலும் என்னுடைய தலை எப்பொழுது பார்த்தாலும் அரித்துக் கொண்டே இருக்கிறது. அழுத்தி சொறிந்தால், தலையில் புண்கள் ஏற்படுகின்றன. இதற்குவழி கூறவும்?
தலையிலுள்ள தோலின் வறட்சியாலும், நீர்க் கட்டிகளாலும், அரிப்பும், புண்களும் தோன்றும். இதற்கு வெள்ளை கரிசலாங்கண்ணியை இடித்து, சாறெடுத்து சமஅளவு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி, பதத்தில் வடிகட்டி, தலையில் தடவி வர குணமுண்டாகும்.
* பஸ், கார், வேனில் பயணிக்கும் போது வாந்தி ஏற்படுவது ஏன்?
விடுமுறை நாட்களில், உறவினர் வீடு, கோவில், மலைப் பிரதேசம் என, வெளியூருக்குச் செல்கிறோம். சிலருக்கு பஸ், வேன், கார், விமானம், கப்பல் போன்றவற்றில் செல்லும்போது, ஒவ்வாமை ஏற்படும். தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை உருவாகும். இது ஏன் ஏற்படுகிறது?
நாம் எந்தச் சுற்றுச்சூழலில் இருக்கிறோம் என்பதை அறியும் தன்மை நமக்கு பிறவியிலேயே உள்ளது. கண்கள் பார்த்துச் செல்ல, கைகளும், கால்களும், உணர்ந்து சொல்ல, மூளைக்குத் தகவல்கள் பறக்கின்றன. நம் காதின் நடுப் பகுதி, மிக நுண்ணிய முடிகள் கொண்ட மேற்பரப்பைக் கொண்டது. அதில், 'எண்டோலிம்ப்' என்ற திரவம் உள்ளது. நாம் தலையை அசைக்கும்போதோ, உடலை அசைக்கும்போதோ, இந்த நுண்ணிய முடிகளும் தம் நிலையை மாற்றி, மூளைக்குத் தகவல் கொடுக்கின்றன. இத்தகவல்களை ஒருங்கிணைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மூளை தயாராவது, ஒளியின் வேகத்தை விட, மிக அதிக வேகத்துடன் நடக்கிறது.
உடனே, நம் உடல், தனக்கு ஏற்ற சூழலில் வசிக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து விடும்.ஓடும் வாகனத்தில் அமர்ந்திருக்கும்போது, கை, கால்களின் தொடு உணர்வுகள், நம் உடல் நகராமல் உள்ளது என, மூளைக்குத் தகவல் அனுப்பும்; ஆனால் கண்ணோ, காட்சிகளை வெகு வேகமாக உள்வாங்கி, நாம் நகர்வு நிலையில் உள்ளோம் என, மூளைக்குச் சொல்லும்; காதில் உள்ள திரவம், வாகனத்தின் அசைவுக்கு ஏற்ப, தளும்பித் தளும்பி, சுற்றிச் சுழலும்.இப்படி, நேருக்கு மாறான தகவல்கள் மூளைக்குச் செல்லும்போது, குமட்டலும், வாந்தியும் ஏற்பட்டு, இந்தச் சூழல், இந்த உடலுக்குச் சரியில்லை என்பதை உணர்த்தும். '3டி' படம் பார்க்கும்போதும், பலருக்கும் இது போல் ஏற்படுகிறது.பெண்களுக்கும்,12 வயது குறைவான குழந்தைகளுக்கும், பயண ஒவ்வாமை ஏற்படுகிறது. சிலருக்கு, லிப்டில், நகரும் படிக்கட்டில் செல்வது கூட, சிக்கலாய் அமைந்து விடுகிறது. குழந்தைகளுக்கு வீடியோ விளையாட்டுக்கள், மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பது கடினமாகிறது. வெகு தூரம் உள்ள பள்ளிக்கு, பஸ்சில் செல்வதும், கடினமாகிறது.
தினமும் வாந்தி,ஒவ்வாமையால் ஏற்படும் அதிக வியர்வை ஆகியவை, பள்ளி செல்வதையே தவிர்க்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. துக்கத்திலும் ஒரு சந்தோஷம் என்பது போல், இளம் வயதில் தோன்றும் இந்த ஒவ்வாமை, வயது ஏற, ஏற, சரியாகி விடும். வாந்தியைக் கட்டுப்படுத்த, அவாமின், டிராமாமைன் போன்ற மாத்திரைகள் உள்ளன. பயணம் துவங்க ஒரு மணி நேரத்திற்கு முன், இந்த மாத்திரையில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம். இவற்றைச் சாப்பிட்டால், தூக்கம் வரலாம். ஆனால், டாம்பெரிடோன் போன்ற மாத்திரைகள், இந்த உபாதைக்குச் சரியாக இருக்காது.மருந்து மாத்திரைகள் சாப்பிடத் தயக்கம் காட்டுபவர்கள், கை வைத்தியங்களைச் செய்து கொள்ளலாம்.பயண ஒவ்வாமை, பல ஆண்டுகளாக காணாமல் போய், திடீரென பாதிக்கத் துவங்கலாம். இது போன்ற உபாதை உள்ளவர்கள், பணியில் சேரும்போது, உபாதை உள்ளதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். விண்வெளி வீரராகவோ, விமான ஓட்டியாகவோ, கப்பலிலோ பணி புரிய ஆசைப்பட்டால், இது போன்ற உபாதைகள், பணியை மேற்கொள்வதில் அதிக சிக்கலை ஏற்படுத்தும்.
*பயணம் கிளம்பும் முன், வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மசாலா, எண்ணெய் கலந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
*மது குடிக்கக் கூடாது.
*வாகனம் செல்லும் திசை நோக்கில் உள்ள இருக்கையில் அமர வேண்டும். பஸ் போன்ற பெரிய வாகனங்களில், டிரைவருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்வது நல்லது.
*தலை குனிவது, புத்தகம் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
*எலுமிச்சை பழத்தை முகர்ந்து கொள்ளலாம். அதன் சாறை, வாயில் தேக்கி வைக்கலாம்.
*இனிப்பு இஞ்சி மொரப்பா சாப்பிடலாம்.
*கை மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அழுத்தும் வகையில், பிரேஸ்லெட்டுகள், ரப்பர் வளையங்கள் அணியலாம்.
-டாக்டர் கீதா மத்தாய், குழந்தை நல மருத்துவர், வேலூர். தொடர்புக்கு: yourhealthgm@yahoo.co.in
