PUBLISHED ON : ஜூலை 24, 2011
மகப்பேறு:
என் மனைவி, இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். அதிகமாய் வாந்தி எடுக்கிறாள். நாங்கள் இதுவரை எந்த மருத்துவரிடமும் போனதில்லை. ஐந்து மாதம் நிறைவடைந்த பிறகே, டாக்டரிடம் போக வேண்டும் என, என் தாய் கூறுகிறார்...
பழங்கால முறையை, தற்போதும் பின்பற்றக் கூடாது. குழந்தை உருவாவதற்கு முன்னரே, தாய்க்கு, பாலிக் அமிலச் சத்து அடங்கிய மாத்திரைகள் கொடுக்க வேண்டும். உங்கள் மனைவி வாந்தி எடுப்பது இயற்கையே. அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்கிறார் என்பது கற்பனையே. அல்லது அவர், ஒன்றுக்கு மேற்பட்ட கருவைத் தாங்கிக் கொண்டிருப்பவராக இருக்கலாம்; சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டும் இருக்கலாம். எனவே, மருத்துவரைப் பார்த்து, ஆரம்ப கட்ட பரிசோதனை, ஸ்கேன் ஆகியவை செய்ய வேண்டியது மிக அவசியம். எல்லாம் சரியாக இருந்து, உங்கள் மனைவி தொடர்ந்து வாந்தி எடுத்தால்...
* காற்றோட்டப் பகுதியில், காலை, மாலை வேளைகளில், ஒரு மணி நேரம் உலா வரலாம்.
* கை மணிக்கட்டுக்கு ஒரு செ.மீ., கீழே உள்ள பகுதியை, 20 நிமிடம் அழுத்திப் பிடித்துக் கொள்ளலாம்.
* அமுல் வெண்ணிலா ஐஸ்கிரீம், தினமும் ஒரு கப் கொடுங்கள். அதில், சுத்தமான பாலும், சர்க்கரையும் உள்ளதால், வாந்தி நிற்கும்.
* குளுக்கோஸ், கோலா பானங்கள் கொடுக்காதீர்கள்.
* சத்தான உணவு உட்கொள்ள வேண்டும் என்ற கணக்கில், அவருக்கு ஆகாரத்தைத் திணிக்காதீர்கள்.
டாக்டர் கீதா மத்தாய்
குழந்தை நல மருத்துவர், வேலூர்
அறுவை சிகிச்சை:
'காட்டரைசேஷன்' என்றால் என்ன? இச்சிகிச்சை எப்படி பயன்படுத்தப்படுகிறது?
சுட்டிகை என்ற பெயரில், தேவையற்ற ரத்தக் கசிவை நீக்கவும், மாமிச வளர்ச்சியை வெளியேற்றவும், சுக்கு, மஞ்சள் கிழங்கு, வசம்பு, மற்றும் வெள்ளி, செம்பு, பொன் போன்ற உலோகங்களை சூடாக்கி, தேவையான இடத்தில் சூடு வைத்து நோயை தீர்க்கலாம் என்பது தேரையர் கருத்து. இதே முறையில் நவீன மருத்துவத்தில் உலோகங்களை மின்சாரத்தின் உதவி கொண்டு சூடாக்கியோ அல்லது சில்வர் நைட்ரேட், டிரைக்குளோரோ அசிடிக் அமிலம், திரவ நைட்ரஜன் போன்றவற்றைக் கொண்டோ காட்டரைசேஷன் செய்யப்படுகிறது.
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்
மதுரை
