PUBLISHED ON : பிப் 08, 2017
என் தந்தைக்கு வயது, 74. சமீபத்தில், என் தாய் இறந்து விட்டார். இந்த இழப்பு, என் தந்தையை மனதளவில் மிகவும் பாதித்தது. அதை தொடர்ந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். முதுமையில் என்ன மாதிரியான பாதிப்புகள் இருக்கும்; அதை எவ்வாறு எதிர்கொள்வது, விளக்குங்களேன்?
கே.அமுதா, ராயபுரம், சென்னை.
முதுமையை, இரண்டாவது குழந்தைப் பருவம் என்பர். குடும்பத்தினர் அனைவரின் அன்பையும், எதிர்பார்க்கும் காலம். அது கிடைக்காத போது, மனம் பாதிக்கப்பட்டு, பல பிரச்னைகள் ஏற்படும். வயதாவதால், பார்வை மங்குதல், காது கேளாமை, துாக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல், சோர்வு, கைகால் நடுக்கம் போன்றவை ஏற்படும். இதுமட்டுமல்ல, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதன் பாதிப்பாக,
பல நோய்கள் ஏற்படக் கூடும். 'டிமென்ஷியா' எனும் மறதி நோய், 'பார்க்கின்சன்' எனும் நடுக்கம், புற்றுநோய், சிறுநீர் அடக்கமுடியாமை, எலும்புத் தேய்மானம், ஆணாக இருந்தால், புரோஸ்டேட் வீக்கம் போன்றவை, முதுமையில் ஏற்படக்கூடியவை. வயதாகிவிட்டால், உடற்பயிற்சி செய்ய வேண்டியது இல்லை என்ற எண்ணம் தவறு. தினந்தோறும், முடிந்தவரை உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி அவசியம். இவை துாக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களை விரட்டும்.ஆரோக்கியத்தை கொடுக்கும், பல வண்ண காய்கறிகளை உண்பதோடு, கீரைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவை, மூன்று வேளையாக பிரித்து உண்பதைக் காட்டிலும்,ஐந்து அல்லது ஆறு வேளையாக பிரித்து உண்ணலாம். இதன் மூலம், உடல்பருமன், இதய நோய்கள், எலும்பு தேய்மானபாதிப்பு, டைப் 2 சர்க்கரை என, பல நோய்களை தவிர்க்கலாம்.
சின்னம்மை, ரூபெல்லா, ப்ளூ, நிமோனியா, மஞ்சள்காமாலை, டெட்டனஸ், தொண்டை அடைப்பான், கக்குவான், இருமல் போன்ற நோய்களைத் தடுக்க,
தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளலாம். பல், கண், சிறுநீரகம், கல்லீரல், இதயம், காது போன்ற உறுப்புகளை, குறைந்தது, ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.வயதானவர்கள் வாரத்திற்கு ஒருமுறை கை, கால்களில் உள்ள நகங்களை வெட்டி, ஒழுங்காக பராமரிக்க வேண்டும். இல்லையேல், நகங்களுக்கு இடையே கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேர்ந்து, நோய்த் தொற்று ஏற்படும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் உடலில் காயங்களோ, புண்களோ வராதவாறு கவனமாக இருக்க வேண்டும்.
பரமேஸ்வரன்
பொது மருத்துவர், சென்னை.
