PUBLISHED ON : ஜன 18, 2017

சுதா, தனியார் மருத்துவமனையில், தலைமை நர்சாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி ஓர் ஆண்டு கடந்துவிட்டது. ஆனால், இன்னும், சுதாவும், அவளது கணவன் சுந்தரும், கணவன், மனைவியாக வாழ்க்கையைத் துவங்கவில்லை.காரணம் புரியாமல் சுதா திண்டாடிய போது, சுந்தரின் கணினி கிடைத்தது. அதை ஆராய்ந்த போது, அவர், ஆபாச படம் பார்ப்பது தெரிய வந்தது. பிரச்னையை சரிசெய்ய, சுதா அவரை, என்னிடம் அழைத்து வந்தார்.
ஆபாச வீடியோ (போர்னோ கிராபி) இன்று, புதிய சீரழிவாக இருக்கிறது. அதிலும், பாலியல் சுதந்திரம் என்பது, ஆணாதிக்கத்தை உள்ளடக்கியதாகவும், பெண்ணடிமைத்தனத்தை கொண்டதாகவும் இருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சி, திருவிழா என, எங்கு பார்த்தாலும், வக்கிரம். கிருமி கலந்த காற்றைப் போல பரவிக் கிடக்கிறது, ஆபாசம். பாலியல் விஷயங்களை, ரகசியமானதாக, வெளிப்படையாக பேசத் தகாததாக நினைக்கும் சமூகத்தில், பாலுணர்வை துாண்டும் விஷயங்கள், அதிகளவில் இருப்பது பெரிய முரண்பாடு தான். இந்த சூழலில், இணையத்தின் அவசியம் எப்போது தேவை என, குழந்தைகளுக்கு
கற்பிக்க வேண்டும். வரையறையற்ற உடலுறவு முறைகளை காண்பிக்கும் ஆபாச படங்களை, தொடர்ந்து பார்த்து பழகுவோர், உடலுறவு என்பதே, அந்த காட்சிகளை போலத் தான் என, நம்பத் துவங்குகின்றனர். விளைவாக, நிஜ வாழ்க்கையிலும், அதை செய்து பார்க்க விரும்புகின்றனர். அதனால் தான், குழந்தைகளின் மீதும், பெண்களின் மீதுமான, பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.அதிகப்படியான உடலுறவு கிளர்ச்சி என்பது, நிச்சயமாக சந்தோஷத்தை தரக்கூடியது அல்ல. மாறாக, மனச்சிதைவின் அறிகுறி. 'போர்னோ'விற்கு அடிமையான ஒருவருக்கு, பாலியல் இன்பமும், சுகமும், மற்றொரு நபரிடமிருந்து கிடைக்கும் என்பது, கற்பனையாகவே இருக்கிறது. அதனால், அவர்கள் சுய இன்ப பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். 'போர்னோகிராபி'யை, பெண்கள், குறிப்பாக, ௧௫ வயதுக்கு உட்பட்ட, சிறுமியரும் பார்க்கும் சூழல், தற்போது நிலவி வருகிறது. சுந்தர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது பழக்கத்தை மாற்றும் வண்ணம், மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நிச்சயம், சுந்தர் குணமடைவார் என்ற நம்பிக்கை, எனக்கு இருக்கிறது.
ச.மனோகரி,
மனநல ஆலோசகர், மதுரை
