தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உறவு மேலாண்மை: கோபத்தில் பேசாதீர்கள்

உறவு மேலாண்மை: கோபத்தில் பேசாதீர்கள்

உறவு மேலாண்மை: கோபத்தில் பேசாதீர்கள்


PUBLISHED ON : ஜூன் 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தச்சு வேலை தான் அவரின் தொழில். ஓரளவு வருமானத்துடன் கவுரவமாகவே இருக்கிறார். அவரது மனைவி, தங்களுடைய, 16 வயது பையனோடு என்னை சந்திக்க வந்தார். பெற்றோர் ஒரு பக்கமும், பையன் வேறு பக்கமும், எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் போல நின்றிருந்தனர். எதேச்சையாக பெற்றோர் பக்கம் திரும்பிய நேரத்தில் கூட, அப்படி ஒரு வெறுப்பும், கோபமும் பையனின் முகத்தில் தெரிந்தது. பெற்றோரை தனியாக அழைத்து முதலில் பேசினேன். 'இந்த வருஷம், பிளஸ் 2 வகுப்பு போயிருக்கான். இத்தனை வருஷமா எப்படி இருந்தானோ அப்படியே தான் இப்பவும் இருக்கான். புத்தகத்தை எடுத்துப் படிக்கிறதே இல்லை. அவன் கூடப் படிக்கிற பிள்ளைங்கன்னு சொல்லிட்டு நிறைய பையன்கள் தினமும் வர்றாங்க. அவங்களோட வெளியில சுத்துறான். 'அவன் அம்மா, புத்தகத்தை எடுத்துப் படிடான்னு சொன்னா, கொஞ்சங்கூட யோசிக்காம கெட்ட வார்த்தையில திட்டுறான். அவன் வீட்டுக்குள்ளேயே சொல்ற கெட்ட வார்த்தை எல்லாம் காது கொடுத்து கேட்க முடியாது' என்றார் ஆதங்கத்தோடு. எதுவும் பேசாமல் இருந்த அவன் அப்பா, 'நான் சொல்ற நேரத்துல குளிக்கிறது இல்லை; சாப்பிடுறது கிடையாது. பையனை சரியா வளர்க்கத் தெரியாம, வெளி மனுஷங்க உதவியை கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்துட்டான்' என்றார்.

கொஞ்ச நேரம் பெற்றோரை காத்திருக்கச் சொல்லிவிட்டு, பையனை தனியாக அழைத்தேன். 'என்னப்பா, அம்மா, அப்பா உன் நல்லதுக்குத் தானே சொல்றாங்க. ஏன் இப்படி நடந்துக்கிறே?' என்றவுடன். 'எது நல்லது? என் பிரெண்ட்ஸ முன்னாடியே, என்னை திட்டுறதா? மத்தவங்க முன்னாடி, என் நடத்தையை அசிங்கமா பேசுறாங்க. நான் ஒண்ணும் மோசமா படிச்கிறவன் இல்லை. 10, பிளஸ் 1ல நல்லாத்தான் மார்க் வாங்கியிருக்கேன்' என்றான்.

'வெளியில் போய்விட்டு வந்தால், அவன் மேலே சிகரெட் வாசனை வருது' என்று, அவன் பெற்றோர் கூறினர். அவனை நேரில் பார்த்தபோது, அப்படி எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என்று தோன்றியது. ரத்தப் பரிசோதனை செய்தேன். சிகரெட் பழக்கத்திற்கு அடிமை ஆகவில்லை என்றாலும், அவ்வப்போது நண்பர்களோடு சேர்ந்து, சில முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறான். தற்போதைய சவால் 'டீன் ஏஜ்'ஜில் இருக்கும் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இருக்கும் பிரச்னை தான், தற்போது மிகப் பெரிய சவாலாக உள்ளது. காரணம், முற்றிலும் இருவேறு தலைமுறையினர் இவர்கள். பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும் என்ற அக்கறை இருந்தாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்று பெற்றோருக்குத் தெரிவதில்லை. இந்த பையன் விஷயத்தையே எடுத்துக் கொண்டால், நண்பர்களோடு வெளியில் போகும் சமயங்களில், அப்பாவின் பைக்கை எடுத்துப் போவது அவன் வழக்கம். நான்கு முறை சாலை விதிகளை பின்பற்றாமல் விபத்து ஏற்படுத்தி உள்ளான். அதுபோன்ற சமயங்களில் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம், 'போலீஸ் கேஸ்' எதுவும் இல்லாமல், அவனை அழைத்து வந்துவிட்டார் அவன் தந்தை.

என்ன செய்யலாம்?

பையன் சிறிய குழந்தை இல்லை; வளர்ந்த பையன். ஆனாலும், அவன் உடல் வளர்ந்த அளவு மனது இந்த வயதில் வளர்ந்திருக்காது. பெற்றோரும், பிள்ளைகளும் எப்படி தொடர்பு கொள்கின்றனர் என்பது முக்கியம். எல்லா விஷயங்களிலும் குறிப்பாக குளிப்பது, சாப்பிடுவது, நீங்க சொல்றபடி தான் கேட்கணும் என்று எதிர்பார்ப்பது தவறு. இந்த வயதில் நண்பர்கள் தான் முக்கியம் என்று தோன்றும். நண்பர்கள் எப்படி என்று தெரிந்து, பையனை வழி நடத்த வேண்டும். பிளஸ் 2வில் மட்டும், அவன் புத்தகமும் கையுமாக இருந்தால் போதும் என்று நினைத்து, இதுவரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்துவிட்டு, சட்டென்று கட்டுப்பாடுகளை விதிப்பது, அவனுக்கு கோபத்தை வரவழைக்கும். எல்லாவற்றையும் விட முக்கியம், இந்த வயதில், மற்றவர்கள் முன் அவனை எதுவும் பேச வேண்டாம். குறிப்பாக, கோபமாக இருக்கும் நேரத்தில் பேசவே வேண்டாம்.

டாக்டர் சங்கீதா சங்கர நாராயணன்

மனநல மருத்துவர், சிம்ஸ்

96774 76555

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us