PUBLISHED ON : அக் 19, 2016

சமீபத்தில், இள வயது தம்பதியான சுஜித், 27- மற்றும் தீபா, 19,வை சந்திக்க நேர்ந்தது. திருமணமாகி மூன்றே மாதங்களான நிலையில், பெண் தனக்கு இந்த பந்தத்தில் உள்ள குறைகளை பட்டியலிட்டு கூறி, தனக்கு தற்காலிக அல்லது நிரந்தர பிரிவு வேண்டும் என்று வீட்டில் பிரச்னை எழுப்பியிருக்கிறாள்.
எனவே, பெண்ணின் தாய் மிகுந்த குழப்பம் மற்றும் மன உளைச்சலால், அவர்களை, 'கவுன்சலிங்'குக்கு அழைத்து வந்தார். முதலில் பெண்ணிடம் பேசினேன். நான்கு வருட காதல், பின்னர் வழக்கமான பிரச்னைகளுடன் கல்யாணம் நடந்துள்ளது. அப்போது தீபா, பெற்றோரின் அறிவுரைகளை கேட்கும் மனநிலையில் கூட இல்லை. சற்று பிடிவாதமாகவே இந்த கல்யாணத்தை செய்து கொண்டிருக்கிறாள்.ஆனால் என்னிடம் பேசும் போது, தனக்கு இந்த வாழ்க்கை சற்றும் பிடிக்கவில்லை. அவன்(?) நடத்தை-
அளவுக்கதிகமான அன்பு, அன்யோன்யம் மகிழ்ச்சி தராமல், எரிச்சல் மற்றும் மன அழுத்தத்தை மட்டுமே தருகிறது என்றாள். இருவருக்கும் வீட்டு வேலைகளில் போட்டி சண்டை, ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் (தங்களது போன்கால் எடுக்கவில்லை என்றால்) வாக்குவாதம் எல்லாம் உள்ளது. ஆனால், அந்த பெண்ணிடம் பேசும் போது ஒன்று தெளிவாக புரிந்தது; கண்டிப்பாக, முதிர்ச்சியற்ற பெண் அவள். இரண்டு விஷயங்களில் அதை கவனித்தேன். ஒன்று, 'அன்று அவ்வளவு பிடிவாதமாக அந்த பையனை விரும்பிய நீ, இன்று உன்மேல் அதிக பிடிப்பாக இருப்பதே பிடிக்கவில்லை என்கிறாயே?' எனக் கேட்டதற்கு, அவளிடம் தெளிவான பதில் இல்லை. இரண்டு, விவாகரத்து வரை யோசிக்க வைக்கும்
அவளுடைய முதிர்ச்சியற்ற சிந்தனையும், அவளை நிலைப்புத் தன்மை கொண்ட பெண்ணாக காட்டவில்லை.அடுத்து சுஜித்திடம் பேசும் போது, அந்த இளைஞன் முதிர்ச்சியுடன் பேசினார். உண்மையான காதல், வெளியுலக அறிவு போன்றவை நன்றாக தெரிந்தது. இப்போது தான் அனுபவிக்கும் சில மன கசப்புகளை கூட, சகஜமாகவும் அதே சமயம், மெல்லிய வருத்தத்துடனும் கூறினான். மனைவி சற்றே ஆதிக்கம் செலுத்துவது, நெருங்கவிடாமல் இருப்பது, அவளின் திடீர் நடத்தை மாற்றம் இவையே தற்போதைய பிரச்னைகள் என்றார்.
தீர்வு என்ன?
சரி செய்ய வேண்டிய விஷயங்கள் என்று பார்க்கும் போது, பெண் தன்னுடைய செல்ல வளர்ப்பு முறையை இங்கும் பின்பற்றுவதை விட வேண்டும். தன் கணவனிடம் மனம் விட்டுப் பேசி, இயல்பாக இருக்க வேண்டும். நிலையான மனநிலையை பழக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தற்காலிகப் பிரிவோ அல்லது விவாகரத்து என்கிற முடிவோ நிச்சயமாக பலன் தராது என்பதை அவள் உணர வேண்டும் என்று விளக்கினேன்.இளைஞரிடம் முதிர்ச்சி இருந்தாலும், மனைவியை கையாளவும் அதை உபயோகிப்பது அவசியம் என்றும், எதுவுமே (அன்பு உட்பட) அதீதமானால் கண்டிப்பாக சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதையும் புரிய வைத்தேன்.
டாக்டர் நளினி சந்திரசேகரன்
98847 78288
