PUBLISHED ON : ஜன 17, 2016

மக்கள் சிறு தானிய உணவுகளை சாப்பிட்ட காலத்தில், யாருக்கும் பெரிய அளவில் எந்த நோயும் வந்ததில்லை. இதில் குறிப்பாக, ராகி கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்கள், உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுத்தது. இன்றைக்கும்
நம் உணவில், இவ்வகை தானியங்கள் இடம் பெறுவதில்லை. அரிசி, கோதுமை மற்றும் நவநாகரிக உணவு முறைக்கு மக்கள் மாறிவிட்டனர்.
சிறுதானியங்களில் ராகி மிக சிறந்த உணவாகும். இது அனைவருக்கும் ஊட்டமளிக்கக்கூடியது. இது போன்ற சத்துள்ள தானியங்களை உணவாக உண்டதால் தான், நம் முன்னோர் நீண்ட காலம் வாழ்ந்தனர். கொங்கு நாட்டில் ராகி பிரதான உணவாக இருந்துள்ளது. ராகி அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுந்தது.
அரிசி உணவில், நெல்லை அரிசியாக மாற்றும் போது, அதன் சத்துகள் அனைத்தும் தவிட்டிலும், உமியிலும் போய் விடுகிறது. ஆனால் ராகியிலோ அப்படியில்லை. ராகியை அப்படியே அரைத்து, மாவாக உபயோகிக்கிறோம்.
தவிடு, உமி என்று பிரிக்க முடியாது. பலர் ராகி களியை, சிறைச்சாலையில் கொடுக்கும் உணவு என்று கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ராகியில் உள்ள சத்துக்கள், அரிசியில் உள்ள சத்துக்களை விட அதிகமானதாகும். ராகியின் குணங்களை பட்டியலிட்டால், அதன் பலனை தெரிந்து கொள்ளலாம்.
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. பி கரோட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. எனவேதான் ராகியை, பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம், நமது கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட, ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆகி விடும். மீண்டும் பசி எடுக்கும். எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவாக எடுக்கும்.
ராகி களி உடல் சூட்டை தணித்து, குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில்,. கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது. இதய நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை
கட்டுப்படுத்துவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்.
மலச்சிக்கல் ஒழியும். அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். தென் மாநில மக்கள் பலர், தங்கள் அந்தஸ்து, நாகரிகம், வாய்ந்தவர்கள் என காண்பிக்க, நம்பர் ஒன் வெண்மை அரிசியைச் சாப்பிடுகிறார்கள். ராகி விலை மலிவான உணவு என்று கருதுகின்றனர்.
இது தவறான கருத்தாகும். ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும். ராகி சத்து மிகுந்தது என்பதற்காக, அதனை அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதனை படிப்படியாக, வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும், பிறகு மூன்று முறை எனவும், ஆரம்பிக்க வேண்டும்.
ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகியில் பலவிதமான உணவு செய்யலாம். இவ்வாறு செய்வதால், சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

