PUBLISHED ON : செப் 11, 2016

மரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், நீண்டகாலமாக நிழல் கொடுத்த மரங்களும், வெட்டப்பட்டு வருகின்றன. காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் உழைத்து, களைத்து வீட்டுக்கு செல்லும் போது, அயர்ச்ச்சி ஏற்படுவது வழக்கம்.
இதிலிருந்து விடுபட, வீட்டில் தாவரங்கள் மற்றும் மரங்களை வளர்ப்பது, மன உளைச்சலில் இருந்து, நம்மை விடுபட வைக்கும். தாவரங்கள், மரங்களுடன், நாம் தினமும் உரையாடலாம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, இச்செயல் சற்று வித்தியாசமாக தோன்றினாலும், தாவரங்களுக்கும், மரங்களுக்கும் உணர்வு இருக்கிறது என்று, அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.
வீட்டுக்கு செல்லும் போது, குழப்பமான மனநிலை, சிந்தனை இருந்தால், அதை மரங்களிலோ, செடிகளிலோ மாட்டி விட்டு, வீட்டுக்குள் நுழையலாம். அப்போதே, மனம் தூய்மையடைந்து, மனதினுள் மகிழ்ச்சி ஏற்படும். இதனால், வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும்.
ஒவ்வொருவரும் மனம் விட்டு பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும். இம்முறையை தினந்தோறும் பின்பற்றும் போது, தொடர்ச்சியாக நம் மனம் அமைதியடையும்.
வீட்டுக்கு செல்லும் போது, எந்த சிந்தனையும் இருக்காமல், வீட்டில் இருப்பவர்களுடன் உற்சாகமாக இருக்க வைக்கும். மீண்டும் காலையில் கிளம்பும் போது, அந்த மரத்தில் மாட்டி வைத்த குழப்பங்கள், பிரச்னைகளை உற்று நோக்குங்கள். முந்தைய இரவு இறக்கி வைத்த, பல பிரச்னைகளுக்கான தீர்வு, நம் கண் முன்னே இருக்கும். இப்பழக்கத்தை, குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்க்கும் போது, கோபம் குறைந்து, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மற்றவர்கள் கருத்தை கேட்டல் உட்பட நற்குணங்கள் வளரும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். மரக்கன்றை வீட்டு வளாகத்தில் நடுவது தான்.
