PUBLISHED ON : ஏப் 23, 2023

தரையில் உட்கார்ந்து கையை ஊன்றாமல், எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒருவரால் எழுந்திருக்க முடிந்தால், அவருக்கு ஆயுள் 100 வயது.
முதியவர்களை தரையில் அமர வைத்து, எழ வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், கை, முட்டி என்று எதையும் தரையில் ஊன்றாமல் எழுபவர்களுக்கு 0 புள்ளி. ஒரு கையை ஊன்றி எழுந்தால் 1 புள்ளி, இரு கைகளையும் ஊன்றி எழுந்தால் 2 புள்ளிகள் தரப்பட்டன.
இப்படி உட்கார்ந்து எழும் உடல் வலிமையை பார்த்து, அளவீடு செய்து, தொடர்ந்து அவர்களை பல ஆண்டுகள் கண்காணித்ததில், அதிக புள்ளிகள் பெற்றவர்களின் இறப்பு அபாயம், மற்றவர்களை விடவும் 21 சதவீதம் அதிகரிப்பது தெரிந்தது.
நம் நாட்டிலும், சீனா, ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளிலும், தரையில் சம்மணம் போட்டு அமரும் சுகாசனம் இருந்தது.
தற்போது தரையில் அமரும் பழக்கமே போய்விட்டது. சோபா, நாற்காலியில் அமர்வதால், பின்புற தசைகளுக்கு எந்தவித வேலையும் இருக்காது. பல மணி நேரம் இப்படி அமர்வது தான் மூட்டு வலி, முதுகு வலி என அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்.
சோபா, நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து எழுந்தால், முதலில் கால்கள் மரத்துப் போன உணர்வு வரும். அடுத்து பின்புறத்தில் வலி வரும். காரணம், தரையில் உட்கார்ந்து, படுத்து, எழும் போது தசைகளும், எலும்புகளும் வலுவாகின்றன.
நவீனமாக, பாதம் மட்டுமே தரையில் படும்படி உட்கார்ந்தே பழகும் முதியவர்களுக்கு உள்ள அபாயம், கீழே விழுந்து எலும்பை உடைத்துக் கொள்வது தான். சுகாசனம் முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து பழகுவது, ஆயுளைக் கூட்டி, பின்புறம் முதுகுத் தண்டு மற்றும் முட்டியை வலுவாக்கும்.
- ஜெரன்டாலஜி துறை,
ஐரோப்பிய பல்கலைக் கழகம்.
