PUBLISHED ON : மார் 06, 2011
சத்து மாத்திரைகள் சாப்பிடும் விதத்தை ஆராய வேண்டும்!
நந்தினி, உடுமலைப்பேட்டை: மூன்றரை வயதாகும் என் மகள், சாப்பிட மறுக்கிறாள்; உடல் எடை குறைவாக இருக்கிறாள். அவள் உயரத்திற்கு 15 கிலோ இருக்க வேண்டும் என, குழந்தை நல மருத்துவர் கூறுகிறார். பல முறை, வயிற்றில் பூச்சிகள் அகற்றும் மருந்து கொடுத்து பார்த்தோம். ஊட்டச்சத்து டானிக்கும் கொடுத்தோம். இரவு நேரங்களில், 'பீடியாஷ்யூர்' கலந்த பாலை, பாட்டிலில் கொடுத்துப் பார்த்தோம். முன் பற்களில் சொத்தையாகி, வாயின் உட்புறத்தில் புண் ஏற்பட்டுள்ளது. பல் வலி எடுப்பதாகவும் கூறுகிறாள்...
பாலை புட்டியால் புகட்டுவதால் பல்லில் குழி ஏற்பட்டு, வாயில் புண் உருவாகி இருக்கலாம். பல்லில் பால் ஒட்டிக் கொள்ளும் போது, பாக்டீரியாக்கள் மேலும் வளர்ந்து, வாயை ஆக்கிரமித்து, பால் பற்கள் ஏற்பட்டிருக்கலாம். இந்த பால் பற்கள், தானாகவே உதிர்ந்து விடும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. பிரச்னை என்னவெனில், பல்லில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொண்டு, உபாதை கொடுப்பது தான். இதனால், உணவு சாப்பிடுவதை தவிர்ப்பாள்; உடல் எடையும் வளர்ச்சி காணாது. பாட்டிலில் பால் புகட்டும் வயதை, உங்கள் மகள் தாண்டி விட்டாள். தூங்கும் நேரத்தில் பால் கொடுத்தால், குடித்து விடுவாள் என்ற எண்ணத்தில் நீங்கள் செயல்படுவது புரிகிறது. எனினும், பாட்டில் பழக்கத்தை நிறுத்தி விட்டு, பல் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். அவர், பல் குழிகளை நிரப்பி, தேவையான சிகிச்சை தருவார்.
கிறிஸ்டோபர், காஞ்சிபுரம்: நான் நீரிழிவு நோயாளி. காபி, டீ, தயிரில் 'சுகர் ப்ரீ' மாத்திரை போட்டு சாப்பிடுகிறேன். இது பாதுகாப்பானதா?
சர்க்கரைக்கு மாற்றாக செயற்கைப் பொருட்கள் நிறைய கிடைக்கின்றன. சச்சாரின் மற்றும் அஸ்பார்டேம் ஆகியவை, இந்தியாவில் கிடைக்கும் மாத்திரைகள். இரண்டுமே பாதுகாப்பானவை தான் என்றாலும், சச்சாரின் மாத்திரையை எலிகளுக்கு கொடுத்த போது, சிறுநீர் பையில் புற்றுநோய் ஏற்பட்டது தெரிந்தது. அஸ்பார்டேம் மாத்திரையை, நாள் ஒன்றுக்கு 40 மி.கி.,க்கு மேல் சாப்பிடக் கூடாது. எனவே, காபி, டீ போன்ற பானங்களை, சர்க்கரை இல்லாமலேயே சாப்பிடப் பழகிக் கொள் ளுங்கள்.
ராதா மாதவன், சிதம்பரம்: எனக்கு 37 வயதாகிறது. என் முகம் வெளிறி இருக்கிறது. எனக்கு ரத்தசோகை ஏற்பட்டுள்ளதாக டாக்டர் கூறுகிறார். ஹீமோகுளோபின் அளவு ஏழு கிராமாக உள்ளது. இரும்புச் சத்தும், துத்தநாகச் சத்தும் அடங்கிய மாத்திரையை, தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட வேண்டும் என, டாக்டர் கூறினார். மூன்று மாதங்களாக சாப்பிட்டும், முன்னேற்றம் இல்லை. என்ன செய்வது?
ரத்தசோகையை சரியாக பரிசோதிக்க வேண்டும். மாதா மாதம் அதிக ரத்தப்போக்கு, மூல நோய், குடல் புண் ஆகிய பாதிப்பு ஏதேனும் உள்ளதா எனக் கண்டறிய வேண்டும். குடலில் உள்ள ஒட்டுண்ணிகள், உங்கள் ரத்தத்தை உறிஞ்சி விடும் வாய்ப்பும் உண்டு. அரிதாக புற்றுநோய் கூட, ரத்தசோகை போல தெரியும். இந்த காரணங்கள் ஏதும் இல்லையெனில், ஊட்டச்சத்து மாத்திரைக்கு பலன் கிடைக்க வேண்டும். குடலில், இரும்புச் சத்து மற்றும் துத்தநாகச் சத்தை உறிஞ்சும் பகுதிகள், ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொண்டிருக்கும். எனவே, இரண்டு சத்தையும் ஒன்றாக சாப்பிட்டால், ஒவ்வொரு பகுதியும், சத்துக்களை உறிஞ்ச போட்டி போடும் நிலை ஏற்படும். ஒரு கட்டத்தில், அவை அடைத்துக் கொண்டு, சத்துக்கள் உறிஞ்ச இயலாத நிலை ஏற்படும். எனவே, இரும்புச் சத்து மாத்திரையை தனியாகவும், துத்தநாகச் சத்து மாத்திரையை தனியாகவும், 12 மணி நேர இடைவெளியில் சாப்பிட வேண்டும்.
