PUBLISHED ON : ஆக 09, 2015

நாள்பட்ட ஹெபடைடிஸ் சி உள்ள பெரும்பாலானோருக்கு, நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால், பரிசோதனைகளை செய்யும் வரை, தாங்கள் அந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. நோய் அறிகுறிகள் வெளிப்படும் போது, அவை பெரும்பாலும் முற்றிய கல்லீரல் நோயின் அடையாளமாகவே உள்ளன. காய்ச்சல், அசதி, பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிவயிற்று வலி, அடர்நிற சிறுநீர், வெளிர்நிற மலம், மூட்டு வலி மற்றும் மஞ்சள் காமாலை நோய் அறிகுறிகளாக உள்ளன.
ஹெபடைடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலரால், வைரசிலிருந்து விடுபட்டு வெளியில் வரமுடிகின்ற அதே வேளையில், பெரும்பாலானோருக்கு அது நாள்பட்ட அல்லது ஆயுள் முழுவதற்குமான நோய் தொற்றாக மாறுகிறது. இதுகுறித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி இரைப்பை, குடலியல் துறையின் உதவி பேராசிரியர் ராஜா கூறியதாவது:
ஹெபடைடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 100 பேரில், 75 பேருக்கு, நாள்பட்ட நோய் தொற்று உருவாகும். நோயால் பாதிக்கப்பட்ட 75 பேரில், 20 பேர், மிகவும் நோயுற்றவராக அல்லது உடல் நலமில்லாதவராக மாறுவர். இது, பொதுவாக கல்லீரலை கடுமையாக சேதப்படுத்துவதற்கு பல ஆண்டுகள் ஆகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ரத்தத்துடன், தொற்றுக்கு ஆளான நபர் தொடர்பு கொள்ளும் போது, பரவுகிறது. இது, பல வகைகளில் நிகழலாம். இந்தியாவில் பொதுவாக, ரத்தம் மாற்றியேற்றுதல் வாயிலாக, இது பரவுகிறது. மருந்துகளை உட்செலுத்துவதற்கான உபகரணத்தை அல்லது ஊசிகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
வீடுகளில் அல்லது மற்ற உரிமம் பெறாத இடங்களில் அல்லது முறைசாரா தளங்களில் பச்சைக் குத்திக் கொள்வது அல்லது உடற்துளைப்பு மூலம், பலர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அரிதான நிகழ்வுகளில், பாலுறவு மூலமாகவும் பரவக்கூடும். ஹெபடைடிஸ் சி உள்ள தாய்மார்களுக்கு, பிறக்கின்ற குழந்தைகளுக்கு, பிறப்பின் போது தொற்று ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல், தொற்றுக்கு ஆளானவரின் சவரக்கத்தி அல்லது டூத் பிரஷ் அல்லது கூரிய பொருட்கள் போன்றவற்றை பகிர்ந்துக் கொள்கிற நபரும் தொற்றுக்கு ஆளாகலாம்.
பல்வேறு ரத்தப் பரிசோதனைகள் மூலமாக, இது கண்டறியப்படுகிறது. சில நேரங்களில், கல்லீரல் ஆரோக்கியத்தை பாதித்துள்ளதா? என்பதை சோதிப்பதற்காக கல்லீரல் பயாப்சியும் செய்யப்படுகிறது.
பெரும்பாலான நோயாளிகளுக்கு, கல்லீரல், இழைநார் வளர்ச்சி அல்லது கல்லீரல் புற்றுநோய் உருவாவதற்கு முன், ஆரம்பத்திலேயே அதை கண்டறியலாம். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்ற போதிலும், சமீபத்திய ஆற்றல் மிக்க வாய்வழி மருந்துகள் மூலம், 12 முதல் 24 வாரங்களில் நோயை குணப்படுத்த முடிகிறது.
இவ்வாறு, டாக்டர் ராஜா கூறினார்.

