கனவு தவிர்... நிஜமாய் நில்! - அப்பாவும், தாத்தாவும் காரணமாகலாம்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - அப்பாவும், தாத்தாவும் காரணமாகலாம்!
PUBLISHED ON : நவ 04, 2018

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு நன்றாக இருக்கும் வரை பெண்களின் இதயம் பாதுகாப்பாக இருக்கும். இது, பொதுவான நியதி. ஆனால், விதிவிலக்குகள் உண்டு.
1. சில பெண்களுக்கு குடும்ப பின்னணி, அதாவது, நெருங்கிய ரத்த உறவுகளுக்கு, 60 வயதிற்குள், 'ஹார்ட் - அட்டாக்' வந்திருக்கும். அப்படிப்பட்ட குடும்ப பெண்களின் மரபணுவிலேயே, ஹார்ட் - அட்டாக் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். இதில் அம்மா, பாட்டி என்றில்லை; அப்பா, தாத்தா என்று ஆண் ரத்த உறவுகளுக்கு வந்திருந்தாலும், அந்தக் குடும்ப பெண்களுக்கும் வரலாம்.
2. பிறந்ததில் இருந்தே சில பெண்களின் உடலில் அசாதாரணமான கொழுப்பு இருக்கும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று, என்ன செய்தாலும், கொழுப்பு குறையாமல் அப்படியே இருக்கும். இதனால், இளம் வயதிலேயே ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
3. சில பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில், ஹார்ட் - அட்டாக் வரும். இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பினால், இது ஏற்படுவதில்லை. மாறாக, ரத்தக் குழாய், கிழிந்து விடுவதால் ஏற்படும் அட்டாக். 'ஈ.சி.ஜி., எக்கோ' போன்ற பரிசோதனைகளில், இதை கண்டுபிடிக்க இயலாது.
திசுக்களின் மென்மைத் தன்மைக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணம். கர்ப்ப காலத்தில், இதன் சுரப்பு அதிகம் இருப்பதால், திசுக்கள் இன்னும் மென்மையாகி விடும். இதனால், திசுக்கள் கிழிந்து விடலாம். இதற்கு வழக்கமாக செய்யும் சிகிச்சை முறை பலன் தராது. உடனடியான அவசர சிகிச்சை தேவை. கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இது போல இருக்காது. சில பெண்களுக்கு இது சாத்தியம்.
4. அடிபட்டு ரத்தம் வெளியில் வந்தால், சில சமயங்களில் உறைந்து, ரத்தக் குழாயில் கட்டி உருவாகும்.
5. புகை, மது, உணவு பழக்க மாற்றம் ஆகியவை இந்திய இளம் பெண்களிடமும் அதிகரித்து விட்டது. இதனாலும் பாதிப்பு வரலாம்.
பிறவியிலேயே, கொழுப்பு அதிகம் உள்ளதை ரத்த பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய இயலும். அதிக கொழுப்பு இருந்தால், கண் புருவம், முழங்கை, காலில் உள்ள தோலில் வெள்ளையாக தழும்பு இருக்கும். இது வளர் இளம் பருவத்தில் இருந்து வளர ஆரம்பிக்கும். இதை சரி செய்ய, மாத்திரைகள் மட்டுமே ஒரே தீர்வு.
இதயத்தில் என்ன பிரச்னை என்றாலும், ஹார்ட் - அட்டாக் கிடையாது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மட்டுமே ஹார்ட் - அட்டாக் வரும்.
இதயம், உடல் முழுக்க ரத்தத்தை பாய்ச்சுகிறது. இதற்கு மின்சாரம் தேவை. இதில் பிரச்னை என்றால், படபடப்பு, மயக்கம், வலி வரும். பரிசோதனை செய்தால், ஹார்ட் - அட்டாக் அறிகுறி இருக்காது. தொற்று ஏற்படுவதால், இதய தசைகளில் வலி வரும். இதனாலும் மார்பு பகுதியில் வலி வரும்.
வயோதிகம், மரபியல் காரணங்களை, நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், உடல் எடையை சீராக பராமரிப்பது, உணவுப் பழக்கம், இடுப்பு அளவு அதிகரிக்காமல் இருப்பது, சர்க்கரை கட்டுப்பாடு போன்ற, தவிர்க்கக் கூடிய விஷயங்களில், கவனமாக இருந்தாலே, இதய பிரச்னைகளை தவிர்க்கலாம்.
டாக்டர் கோபால முருகன்,
இதய நோய் சிகிச்சை நிபுணர், சென்னை.
heart@gopalmurugan.com
