
* கோடைக் காலத்தில் சின்னம்மை, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று வியாதிகளும், நீர் அளவு குறைவதால் ஏற்படும் 'டீஹைட்ரேஷன்,' உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க் கடுப்பு போன்ற பிரச்னைகளும் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது.
* கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க, அதிக அளவில் வியர்வை வெளியேறும். அதனால், அதிக அளவில் தண்ணீர் குடிப்போம். எல்லா இடங்களிலும் பாதுகாப்பான நீர் கிடைக்குமா என்பது தெரியாது. எனவே, அவசரத்துக்கு கிடைக்கும் தண்ணீரைக் குடிப்பதால், நீர் மூலம் பரவும் வியாதிகளுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது.
* 'விப்ரியோ காலரா' என்ற பாக்டீரியாத் தொற்றால் ஏற்படும் நோய்தான் 'காலரா.' அசுத்தமான தண்ணீர் மற்றும் பாதுகாப்பற்ற உணவின் மூலமாக பரவும்.
* 'காலரா'வின் முக்கிய அறிகுறி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி. உடலில் இருந்து, மிக அதிக அளவில் நீர் மற்றும் 'எலெக்ட்ரோலைட்' எனும் வேதிப் பொருட்கள் வெளியேறும் போது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
* சின்னம்மை, 'வேரிசில்லா சோஸ்டர் வைரஸ்' என்ற கிருமியால் பரவுகிறது. எளிதில் பரவும் தன்மை கொண்டது. முதலில் உடலில் அரிப்பு ஏற்படும்; அதன் பின் நீர்க்கட்டி தோன்றும்; காற்று மூலம் பரவும். தும்மினாலோ, நேரடித் தொடர்பாலோ ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவும்.
* வெயில் காலத்தில், கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதால் வரும் நோய், மஞ்சள் காமாலை. காய்ச்சலை போல் இதுவும் ஓர் அறிகுறி என்றே கூறலாம். மஞ்சள் காமாலை வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவோ, வைரஸ் கிருமித்தொற்று காரணமாகவோ வரலாம்.
* வைரஸ் கிருமித்தொற்றால், மஞ்சள் காமாலை வருவதற்கு, தண்ணீர் மாசுபாடே காரணம். தண்ணீரில் பரவும் 'ஏ' மற்றும் 'ஈ' வைரஸ்கள் தான், மஞ்சள் காமாலை வருவதற்கான காரணம்.
* கோடையில் குழந்தைகளுக்கு தடிமனான துணிகள் பயன்படுத்தக் கூடாது.
* தாய்ப்பாலிலேயே, 80 சதவீதம் தண்ணீர் இருப்பதால், கோடையில் பிறந்த குழந்தைகளுக்கு, தண்ணீர் தர வேண்டியதில்லை.
* கோடையில் குழந்தைகளின் சருமம் வறட்சி அடையாமல் கவனிக்க வேண்டும். தோல் வறட்சியானால், சிறுநீர் சரியாக கழிக்கவில்லை என, அர்த்தம்.
* வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வருகிறது. 'மலேரியா' என்ற கிருமியால் வியர்க்குரு ஏற்படும். அதைத் தவிர்க்க, தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
* நன்கு கொதிக்கவைத்து, ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். தினசரி, 2.5 முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் சென்று வந்த உடன், குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது; வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.
* காபி, ஆல்கஹால் போன்ற பானங்கள் சிறுநீர்க் கழித்தலை அதிகப்படுத்தும். அதனால், உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படலாம். எனவே, அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
- வசந்த் குமார்,
பொது மருத்துவர்.
dr.vasanthkumar2000@gmail.com

