PUBLISHED ON : ஏப் 02, 2017

இயற்கையில், ஏராளமான சத்துமிக்க பழங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து பழங்களும், ஒவ்வொரு வகையில் சத்து மிக்கதாக உள்ள நிலையில், முலாம் பழத்தில், அளப்பரிய சத்துகள் அடங்கியுள்ளன.
நீர்த்தன்மை மிகுந்த சில பழங்களில் முக்கியமானது முலாம்பழம். உடலுக்கு குளிர்ச்சி தருவதில், முக்கியத்துவம் பெறுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், தாராளமாக சாப்பிட வேண்டிய பழம். மூல நோய்க்கு இது முக்கிய மருந்தாகும். கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு, முலாம்பழம் மிகவும் ஏற்றது.
முலாம்பழத்தின் விதை கூட, நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து. புரதம், சர்க்கரை சத்து, இரும்பு, கால்சியம், விட்டமின் 'ஏ', 'சி' என, பலவித சத்துகள் அடங்கியுள்ளன. முலாம்பழத்தைக் கரைத்து, அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால், வயிறு சுத்தமாகும். நோய்களை தடுக்கக் கூடியது மட்டுமின்றி, உடலுக்கு புத்துணர்வை அளிக்க வல்லது.
முலாம் பழத்துடன், சிறிது பனங்கற்கண்டு அல்லது கரும்பு சர்க்கரை தூவி சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும். இது, வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்கும். சிறுநீர் எரிச்சலை தடுக்கும்.
கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக் கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் பானம் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், கால் ஸ்பூன் சீரகப் பொடி, இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி, சிறிது பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு சரியாகும். வெயிலால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். சீத பேதி, கழிச்சலுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
முலாம் பழம், உள் உறுப்புகளின் உஷ்ணத்தை குறைக்கும். வெளிப்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம், தோல் நோய்கள் குணமாகும். முலாம் பழத்தின் விதை, சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். முலாம் பழத்தில், கரோட்டினாய்டு அதிகமாக உள்ளதால் புற்றுநோயை தடுக்கவும், நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், உடலில் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை வேருடன் அழிக்கவும் உதவுகிறது.
முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், இது செரிமானத்தன்மை நிறைந்தது. அதனால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்துக்கு வழி வகுக்கும். மேலும் இதிலுள்ள நார்ச்சத்து, ஜீரணத்துக்கு இடையூறு விளைவிக்கும் அமிலத்தன்மையை அகற்றுகிறது. முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் எனும் புரதக் கலவை, சருமம் போன்ற திசுக்களின் செல்களைப் பாதுகாக்கிறது. மேலும், உடலில் ஏற்படும் காயங்களை வேகமாக குணப்படுத்தவும், தோலின் உறுதித்தன்மையை காக்கவும் கொலாஜென் உதவுகிறது.
முலாம் பழம் சாப்பிடுபவர்களின் சருமம், வறண்டதாகவோ, சொரசொரப்பாகவோ இருக்காது. முலாம் பழத்தில், சிறுநீர் பிரிப்பு தன்மை உள்ளதால், சிறுநீரக நோயையும், சிரங்கு போன்ற நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும், எலுமிச்சையுடன் சேர்த்து சாப்பிட்டால், கீல்வாதத்தையும் குணப்படுத்தும். பழத்தில் குறைந்த சோடியம், கொழுப்பு இல்லாமை மற்றும் குறைந்த கலோரி உள்ளதால், அவை உடல் எடை குறைப்புக்கு ஏற்றவை.

