PUBLISHED ON : ஜூலை 12, 2015

இன்றைக்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் முடி உதிரும் பிரச்னை முடிவில்லாத பிரச்னையாக இருந்து வருகிறது. ஆடை பாதி; ஆள் பாதி என்று சொல்வார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் அழகின் அஸ்திவாரமாக இருப்பது தலை முடிதான். அது உதிராமல், கருமையாக இருந்தால் போதும்; ஒருவரின் தோற்றம் பார்க்க எடுப்பாக இருக்கும் என்பது தான் எல்லோருடைய எண்ணமும்.
இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அப்போது சக்திவாய்ந்த ரசாயனங்களை பயன்படுத்துவதால், கூந்தல் விரைவாக சேதமடைகிறது. செயற்கையாக தயாரிக்கும் பொருட்களையும் போலியான அலங்காரங்களையும் தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தினால் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
அதற்கு இதோ சில யோசனைகள்: முட்டை வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து சிகைக்காய் போட்டு குளித்தால், தலைமுடி உதிர்வது நின்று விடும். கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து, அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து தேய்த்து வந்தால் முடி உதிராது.
முடி நன்றாக வளர, சோற்றுக் கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது. மேலும், முடி அடர்த்தியாக வளர்வதோடு, தலையும், கண்களும் குளிர்ச்சியாகும். சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி அடர்த்தியாகி, கருமையாக மாறும். கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்- ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து, தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
வெந்தயத்தை ஊற வைத்து, நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு, தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி தலா, 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும். அத்துடன் தலை முடியும் அடர்த்தியாக வளரும்.

