PUBLISHED ON : ஆக 17, 2025

மன பதற்றம் என்பது சிறிய நோய். இதை முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டால், நடத்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பிறவி குண கோளாறு என்ற தீவிரமான 'பர்சனாலிட்டி டிசாடர்' ஆக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உடல் முழுக்க வலி, வாயு தொல்லை, நெஞ்சு வலி, கழுத்து வலி, தோல் அரிப்பு, எரிச்சல் என்று பலவித உடல் அறிகுறிகள் மன பதற்றத்தால் ஏற்படலாம்.
டாக்டர் மாற்றி டாக்டரிடம் ஆலோசனை, ஸ்கேன், ரத்த பரிசோதனை என்று இதுவரை யிலும் பார்க்காத டாக்டர் இல்லை; செய்யாத வைத்தியம் இல்லை.
எல்லா டாக்டரும் ஒன்றும் இல்லை; எல்லாமே நார்மல் என்று தான் சொல்கின்றனர். ஆனாலும் எனக்கு நெஞ்சு வலிக்கிறது, ஏப்பம் வருகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று சொல்வர்.
மன பதற்ற நோய் இருந்தால், இது போன்று உடல் உபாதைகளாகத் தான் வெளிப்படும். இதை 'சைக்கோ சுமாடிக் டிசாடர்' அதாவது மன கோளாறால் ஏற்படும் உடல் உபாதைகள் என்று சொல்வோம்.
இதை புரிந்து கொள்ளாமல், இவ்வளவு சிகிச்சை செய்தும் சரியாகவில்லையே; யாராவது செய்வினை வைத்திருப்பரோ, சூனியம் வைத்து விட்டனரோ? இன்னும் ஒரு படி மேலே போய், ராசிப்படி வீடு கட்டவில்லை; வாஸ்து சரியில்லை. ராசிக்கல் அணிந்தால் சரியாகி விடும் என்று நம்ப ஆரம்பித்து விடுவர்.
பெயரை, ஊரை, இடத்தை மாற்றினால் சரியாகிவிடும் என்று மூட நம்பிக்கைகளில் உழன்று, வசதியாக வாழ்ந்த குடும்பம் அனைத்தையும் இழந்து சிரமப்படுவதை பார்த்திருக்கிறேன்.
இது, மூளை யில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் சிறிய பிரச்னை. மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால், குணமாகக் கூடியது.
பல நோய்களுக்கு மரபணு காரணமாக இருப்பதைப் போன்று, மன பதற்றத்திற்கும் மரபணு தான் காரணம் என்பதை மருத்துவ அறிவியல் உறுதி செய்துள்ளது.
தாத்தாவுக்கு மன பதற்றம் இருந்தால், பேரனுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது. அதற்கடுத்த தலைமுறைக்கும் வரலாம்.
மன பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு மனநல சிறப்பு மருத்துவரை அணுகினால், சுலபமாக இவற்றை தீர்க்க முடியும்.
மற்ற துறை மருத்துவர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம். உடலளவில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், ஒன்றும் இல்லாததற்கு ஏன் பயப்படுறீங்க என்று சுலபமாக சொல்லி அனுப்பி விடுகின்றனர். பய உணர்வு எத்தனை பெரிய விஷயம் என்பது அந்த உணர்வு வருபவர்களுக்கு தான் தெரியும். அவர்களால் மட்டும் தான் உணர முடியும்.
எந்த துறை சார்ந்த சிறப்பு மருத்துவராக இருந்தாலும், நோயாளிக்கு உடலளவில் பிரச்னை இல்லை என்பது தெரிந்த பின்னரும், அறிகுறிகள் தொடர்ந்தால், மனநல டாக்டரிடம் அனுப்ப வேண்டியது அவசியம்.
டாக்டர் ஆனந்தன், மனநல மருத்துவர், சென்னை 93810 22113mindcarechennai@gmail.com