PUBLISHED ON : பிப் 07, 2016
நம் உடல்நலத்தை தீர்மானிப்பதில், தலையணைக்கு முக்கிய பங்கு உண்டு. தூங்கும்போது நம்மை அறியாமலேயே, கைகளைத் தலைக்கு ஆதரவாக மடக்கி வைத்துக் கொள்வோம். அந்த அளவுக்கு நம்முடைய உடலே, தலைக்கு ஓர் ஆதரவு வேண்டும் என்கிறது. தூக்கத்தில் நம் தலைக்கு ஆதரவாக இருப்பதால்தான், அதை 'தலையணை' என்கிறோம்.
தலையின் எடை ஒருவரின் உடலின் எடையில், 8 சதவிகிதம். இந்த எடையை சரியான நிலையில் வைத்துக் கொள்ளாவிட்டால் தசைகள், நரம்பு, ரத்த ஓட்டம், மூச்சுத்திணறல் என பல பாதிப்புகள் ஏற்படலாம். கழுத்தில் இருந்து வரும் 'செர்விக்கோ' வகை தலைவலிகளில், 90 சதவிகிதத்துக்கு தலையணையை சரியாக பயன்படுத்தாததே காரணம் என்று ஆய்வுகள் கூறுகிறது.
காலையில் எழுந்தவுடன் தலை வலிப்பது, மயக்கம் வருவதுபோல இருப்பது, வாந்தி, கைகளில் வருகிற வலி உணர்வு ஏற்படுவது இதனால்தான். கைகளில் அழுத்தம் அதிகமாவதால், நரம்புத்தளர்ச்சியும் சீக்கிரம் வருகிறது. சரியான தூக்கம் இல்லாததற்கும், தலையணை காரணியாக இருக்கிறது. தலையணை சரியாக வைக்காததால், விரும்பத்தகாத அளவு முதுகுத்தண்டுவடம் வளைகிறது.
சரியான தலையணை வைக்கும்போது, தண்டுவடத்தின் நிலை மாறாமல் நேராக இருக்கும். இந்த தவறான தலையணை அமைப்பால்தான் தலை சுற்றல், கழுத்துவலி, தலைவலி போன்றவை வருகிறது. கழுத்தில் தேய்மானமும் சீக்கிரம் வரும். குறிப்பாக உடலின் நரம்பு மண்டலங்களின் கட்டுப்பாடு, தலையில்தான் இருக்கிறது. மூளையில் இருக்கும் ரத்தநாளங்களும் பாதிக்கப்படும்.
இதனால் பலருக்கு அறுவை சிகிச்சை வரை கூட, செல்ல வேண்டியிருக்கலாம். தலையணை மிகவும் மென்மையாக இருக்கக் கூடாது என்பதைப் போலவே கடினமாகவும் இருக்கக் கூடாது.

