PUBLISHED ON : செப் 18, 2016

ஒரு நகைச்சுவை, பலருக்கு தெரிந்திருக்கும்.
ஒருவர்: ஏன், இத்தனை வருடங்கள் கழித்து, தாமதமாக திருமணம் செய்து கொண்டீர்கள்.
மற்றொருவர்: நல்ல மனைவி கிடைத்து விட்டால், இத்தனை நாள் காத்திருந்தது வீண் போகவில்லை என்று நினைத்துக் கொள்வேன். மனைவி, முன்கோபியாக இருந்து விட்டால், இன்னும், கொஞ்ச நாள் தானே வாழப் போகிறேன். அதனால் சமாளிக்கலாம் என்று சொன்னார்.
வாழ்க்கையில், முக்கியமான கட்டம் திருமணம். மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பலருக்கு தெரியாததால், அவ்வப்போது, குடும்பத்தில் பிரச்னைகள் வெடிக்கின்றன.
கணவனிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவனுக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும். தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்கும். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது, முக்கியமானது. மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக் கூடாது. மனது புண்படும்படி பேசக்கூடாது. அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாது.
குறை சொல்லாதீங்க: தன்னுடைய சொந்தங்களை, ஒரு நொடியில் விட்டு, கணவரை நாடி வந்திருப்பர் தான் மனைவி. இவரை, எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாது. முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டுக்கோ செல்லும் போது, மனைவியையும் அழைத்து கொண்டு போக வேண்டும். தன்னுடைய சமையலை கணவன் பாராட்ட வேண்டும் என்று, மனைவி நினைப்பார். நன்றாக இருந்தால் பாராட்ட தயங்காதீர்கள். கொஞ்சம் குறை இருந்தால், இதை இப்படி செய்திருக்கலாம் என்று, அவரின் மனம் நோகாமல் சொல்ல வேண்டும். இது, அவர்களுக்கு பிடித்துப் போகும். அம்மா, சகோதரியின் சமையலோடு, தயவு செய்து ஒப்பிட்டு பேசக் கூடாது; அவர்களை காயப்படுத்தக் கூடும்.
பேச்சுக்கு நேரம்: பணத்தின் பின்னாலே சென்று கொண்டிருக்கக் கூடாது; இந்த எண்ணத்தையும் அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது. வீட்டில் இருக்கும்
நேரங்களிலும், இதையே சிந்தித்து கொண்டிருந்தால், சூழல் மாறிப் போகும். நேரம் கிடைக்கும் போது, குடும்பம், குழந்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தலாம். மனைவியிடமும், குழந்தைகளிடமும், மனம் விட்டு பேசுங்கள்; கிடைக்கும்
நேரங்களில், வெளியில் அழைத்து செல்லலாம்.
ஆலோசனை முக்கியம்: முக்கியமான நேரங்களில், மனைவிக்கு என்ன தெரியும் என்று நினைத்து விட வேண்டாம். அவர்கள் சொல்லும் வழிமுறைகள், நம்மை அடுத்த கட்டத்துக்கு கூட கொண்டு செல்லும். எனவே, இவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற சிந்தனை இருந்தால், உடனடியாக அகற்றி விடுங்கள்.
மனைவியை வைத்து கொண்டு, அடுத்த பெண்ணை பற்றி உயர்வாக சொல்லி விட வேண்டாம். அம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே போல, மனைவிக்கும் கொடுக்க வேண்டும். மனைவிக்கு உடல் நலம் சரியில்லை எனும் போது, உடனிருந்து கவனிக்க வேண்டும். நம்முடைய தாயார், அவர்களின் தாயார் கவனித்து கொள்ளட்டும் என்றிருக்க வேண்டாம்.சந்தோஷத்தையும், துக்கத்தையும் சரிசமமாக பிரித்துக் கொள்வது தான், தம்பதியின் முக்கிய கடமை.
