PUBLISHED ON : அக் 23, 2011

பெற்றோரின் பாவமா?
ஆட்டிசம் குழந்தைகள், முன்பிறவியில் பெற்றோர் செய்த பாவத்தின் வெளிபாடு என்ற தவறான கருத்து உள்ளது. இக்குழந்தைகள் மீதும், அவர்களது பெற்றோர் மீதும் அன்பு பாராட்டி, ஆதரவு காட்டாமல் ஒதுக்கி வைக்கும் போக்கு, நம் சமூகத்தில் உள்ளது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். இது ஒரு குறைபாடு என புரிந்து, இயன்றளவு சரி செய்ய பெற்றோர் முயற்சி வேண்டும். அதற்கு இச்சமூகம் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்காவில், 150 குழந்தைகளில் ஒரு குழந்தைகள் என்ற விகிதத்தில் 15 லட்சம் குழந்தைகள் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 250-க்கு ஒரு குழந்தை என்ற அளவில் மொத்தம் 40 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 6 கோடி 70 லட்சம் குழந்தைகளுக்கு இக் குறைபாடு உள்ளது என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆட்டிசம் குறைபாட்டை, 'மதி இறுக்கம்' என, தமிழில் அழைக்கலாம். இக்குழந்தைகளை பராமரிக்க அதிக பணம் தேவைப்படுகிறது. இதனால், இச்சமூகத்தின் அங்கமாகவே கருதி அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் 5 வயதுக்குள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இது என்னவென்று தெரியாமல் பெற்றோர், அருகில் உள்ள டாக்டரை அணுகுகின்றனர். அவர்கள், சிகிச்சையளிக்கிறேன் எனக் கூறி மருந்து கொடுத்து நாட்களை கடத்தி விடுகின்றனர். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து பயிற்சி அளித்தால், நல்ல பலன் கிடைக்கும். இன்றைய நிலையில் இக்குறைபாட்டுக்கு மருத்துவ சிகிச்சை இல்லை. ஆட்டிசம் குழந்தைகளை, காலம் கடத்தாமல் சிறப்பு பள்ளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும், மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
ஆரம்ப நிலை பயிற்சி மையம்:
பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சி நிபுணர், ஆக்குபேஷனல் தெரபி நிபுணர். சிறப்பு ஆசிரியர் இவர்களைக் கொண்டு, கூட்டாக பயிற்சியளித்தால், நல்ல பலன் கிடைக்கும். பழக்க வழக்க மாற்றம், (பிகேவியர் மாடிபிகேஷன்), உணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை, தொழில் சார்ந்த பயிற்சி மையம், தங்குமிடம் ஆகிய வசதிகளை கொண்டு, பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்கள் தன்னிச்சையாக வாழ வாய்ப்பளிக்கலாம். இதற்காக, ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். பின், சிறப்பு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். சென்னையை அடுத்த முட்டுக்காட்டில், மத்திய அரசின் சார்பில் சிறப்பு பள்ளி செயல்படுகிறது. இவர்கள் தொழில் பயிற்சி பெற, அரசு உதவ வேண்டும். குறிப்பிட்ட சில வேலைகளில் முன்னுரிமை அளிக்கலாம். சிலருக்கு குறிப்பிட்ட திறமை அதீதமாக இருக்கும். அதைக் கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும். இப்போதுள்ள சிறப்பு பள்ளிகளில், சாதாரண நடுத்தர குடும்பத்தினர் சேரும் நிலையில் கட்டணங்கள் இல்லை. எனவே, சிறப்பு பள்ளிகளை அரசு துவங்கி நடத்த வேண்டும்.
- டாக்டர் விஜய் ஆனந்த், பிசியோதெரபிஸ்ட், சென்னை.
சோரியாசிஸ் நோயை குணப்படுத்த முடியுமா?: முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்தலாம். குழந்தை களுக்கு வரும் கட்டேட் சோரியாசிஸ் நோயை, முழுமையாக குணப்படுத்த முடியும். மற்ற வகை சோரியாசிஸ் நோய்க்கு முறையாக சிகிச்சை எடுத்தால், சிரமங்களை குறைத்து இயல்பு வாழ்க்கை வாழலாம்.
சோரியாசிஸ் நோய்க்கு பாரம்பரிய குறைபாடே காரணம்: பாரம்பரிய குறைபாட்டால், 40 முதல் 60 சதவீதம் பேருக்கு, இந்நோய் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய குறைபாடு இல்லாமலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஐம்பது பேரில் ஒருவரை இந்நோய் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
