PUBLISHED ON : செப் 06, 2015

நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற மகத்துவம்தான், மூலிகை செடிகள் என்றால் மிகையாகாது. ஒரு மூலிகை செடி, பல நோய்களை குணப்படுத்தும் தன்மையுள்ளது.
அதில், குறுந்தோட்டி (சிறுதொட்டி என்றும் கூறுவார்கள்) வேர்கள் சிறப்பு பெற்றவை. தைலத்துக்கு பயன்படுத்தும் போது சூடாகவும், கஷாயத்துக்கு பயன்படுத்தும் போது, குளிர்ச்சியாகவும் மாறும் தன்மை கொண்டது.
இதன் வேர்களை காய்ச்சி குடித்தால், விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும். காய்ச்சலுக்கு பின், தண்ணீர் தாகம் அதிகம் இருந்தாலும், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றாது; இதன் வேரை தண்ணீரில் கொதிக்க வைத்து, குடித்தால் இப்பிரச்னையில் இருந்து எளிதாக மீள முடியும்.
நம் கழிவுகள் சீராக வெளியேறவும், வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமாகவும் இவை பயன்படுத்தப்படுகிறது. வேறு நோய்களுக்கான கஷாயத்துக்கும் இந்த வேர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் வேர்கள் எலும்பு தொடர்பான நோய்களை, குணமாக்கும் தன்மை கொண்டது. தைலம் பயன்பாட்டில், இந்த வேர்கள் சூடாக மாறி விடும் தன்மை கொண்டதால், சித்த மருத்துவத்தில் வாத நோய், எலும்பு நோய்களுக்கான மருந்து, தைலம் தயாரிப்பில், இதை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கேரள நாட்டு வைத்தியர்கள் வாத நோய், எலும்பு உருக்கி நோய் மருந்து தயாரிப்பில், இதன் வேர்களை அதிகம் உபயோகிக்கின்றனர். இந்த செடிகள் நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பரவலாக காணப்படுகிறது. இந்த செடிகளை ஆதிவாசி மக்கள் நோய்களை குணமாக்க பயன்படுத்தி வருகின்றனர்.
