இதுவும் கடந்து போகும்... பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்க!
இதுவும் கடந்து போகும்... பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்க!
PUBLISHED ON : அக் 25, 2020

''இந்த ஊரடங்கு காலம், குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றதல்ல. பள்ளி மாணவ, மாணவியர் வீட்டுக்குள் அடைந்து இருப்பது, அவர்களுக்கு உளவியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும். அவர்களிடம் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில், பெற்றோர் பேச வேண்டும்,'' என்கிறார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் தினேஷ் பெரியசாமி.
டீன் ஏஜ் குழந்தைகள் பலர், பெற்றோர் சொல்பேச்சு கேட்காமல் கோபப்படுவது, எதிர்த்து பேசுவது ஏன்?
பொதுவாக, 12 வயது வரை குழந்தைகள், பெற்றோர் சொல்படிதான் இருப்பார்கள். 13 வயதுக்கு மேல் உடலில் பருவ மாற்றங்கள் ஏற்படும் போது, குண மாற்றமும் ஏற்படும். இந்த மாற்றங்கள் இயற்கையானது.
இந்த வயதுக்கு ஏற்ற சிந்தனை மாற்றம் இருக்கும். சுயமான ஆசைகள், விருப்பம், சுதந்திரம், இவை எல்லாம் அவர்களுக்கு தேவைப்படும். அதை அவர்கள், விருப்பம் போல் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வார்கள்.
மனமுதிர்ச்சியற்ற அவர்களின் விருப்பத்தை, பெற்றோர் ஏற்க மாட்டார்கள். படிப்பில் கூட, விரும்பிய படிப்பை படிக்க விட மாட்டார்கள். பிள்ளைகளுடன் பெற்றோர் மனம் விட்டு பேச வேண்டும். விருப்பத்தை அறிந்து, ஆலோசனை சொல்ல வேண்டும்.
ஊரடங்கால் வீட்டில் உள்ள, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
நிச்சயமாக. இந்த ஊரடங்கு காலம், குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றதல்ல. பள்ளி மாணவ, மாணவியர் வீட்டுக்குள் அடைந்து இருப்பது, உளவியல்ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும்.
பள்ளியில் சக மாணவர்களோடு சேர்ந்து விளையாடுவது, படிப்பது என்ற சூழலில் இருந்த குழந்தைகள், அதே சூழலில் இருந்தால்தான், அவர்களுக்கு உற்சாகம் இருக்கும். கொரோனாவால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு, வீட்டில் கட்டுப்படுத்தி வைக்கலாம்.
தொடர்ச்சியாக பள்ளிக்கு அனுப்பாமல், ஆன்லைன் வகுப்பில் உட்கார வைத்தால், கவனச்சிதறல் அதிகரிக்கும். ஏற்படும் பாதிப்பு வயதுக்கு ஏற்ப மாறுபடும். வீடியோ கேம், சமூக வலைதளங்களுக்கு அதிகம் பேர் அடிமையாவார்கள். பிறருடன் பழகுவது குறைந்து விடும்.
தன்னம்பிக்கை இழப்பர். மன அழுத்தம் வரும். இதுவரை அதிக நேரம் வீட்டில் செலவளித்திராத தந்தை, இப்போது அதிக நேரம் உடன் இருக்கிறார். அப்போது சிறு தவறுகளையும் சுட்டிக்காட்டுவதால், பதட்டம் அதிகரிக்கும். புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்ய பயப்படுவார்கள்.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
'பயப்படத்தேவையில்லை; இது ஒரு தற்காலிக பிரச்னைதான். விரைவில் மருந்து வந்து விடும்' என கூறி நம்பிக்கையும் தைரியமும் அளிக்க வேண்டும்.
அவர்கள் முன்னிலையில் டிவியில், கொரோனா செய்திகளை பார்ப்பதையும், விவாதிப்பதையும் தவிர்ப்பது நல்லது. அவர்களின் செய்கைகளில் குறை காணாமல், பாராட்டி தட்டிக்கொடுப்பதன் வாயிலாக, தன்னம்பிக்கை வளரும்; அச்சம் தளரும்.
