PUBLISHED ON : நவ 12, 2014

அழகான ஒரு குழந்தை. அதோட கையில ஒரு சாக்லேட். கிட்ட போய், குழந்தையை கொஞ்சிட்டு, 'சாக்லேட் கொடும்மா'ன்னு கேட்டுப் பாருங்க. கையை 'படக்'குன்னு இழுத்துக்கும். இதுதான் திமிர். அழகான திமிர். இந்த திமிரோட அழகுக்கு காரணம்... அந்த குழந்தைகிட்டே, எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. 'என் பொருள் எனக்கு வேணும்'ங்கற எண்ணம் மட்டும்தான் இருக்கும். ஒரு விஷயத்தை விட்டுக் கொடுக்கறதனால, தனக்கு என்ன ஆதாயம்னு எந்த குழந்தையும் யோசிக்கிறதில்லை. இந்த இடத்துலதான், தன்மானமும், சுயமரியாதை குணமும் வளரும். ஆனா, குழந்தை வளர, வளர, தன்னோட சுயநலத்துக்காக இந்த அழகான திமிரை இழந்துடுது. கூடவே, தன்மானத்தையும், சுயமரியாதையையும்!
திமிர் இரண்டு வகைப்படும். 1. நல்ல திமிர். 2. கெட்ட திமிர்.உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்புன்னு இருக்கறது மாதிரி, நல்ல திமிரு, கெட்ட திமிருன்னு இரண்டு இருக்கு. இந்த நல்ல திமிர், நம்ம மேல நமக்கு மரியாதையை ஏற்படுத்தும். இந்த மரியாதை காரணமா, நம்மளோட எண்ணங்களை நாம மதிக்க ஆரம்பிப்போம். அதேநேரத்துல, மத்தவங்களோட கருத்துக்களை அலசிப் பார்ப்போம். இதனால, அடுத்தவங்க நம்ம மேல ஆதிக்கம் செலுத்துற சூழல் வராது. ஒருவேளை, இந்த திமிர் இல்லாம இருந்தா, சுயமா சிந்திக்கிற சக்தி இருக்காது. எதையும் எதிர்க்கிற துணிவு வராது. ஒருகட்டத்துல, நம்ம மேலேயே நமக்கு பரிதாப உணர்ச்சி வந்துடும். இதுதான், மனஉளைச்சலுக்கான ஆரம்பம்.
தலைவன் என்றாலே திமிர் பிடித்தவன்தானாம்!அந்தகாலத்து ராஜாக்கள்ல இருந்து, இந்தகால தலைவர்கள் வரை, அத்தனைபேரும் திமிரானவர்கள்னு சொன்னா, கோபப்படக்கூடாது; யோசிக்கணும். 'ஒரு விஷயம் இப்படித்தான் இருக்கணும்'னு தீர்க்கமா முடிவெடுக்கறவன்தான் தலைவன். ஆனா, அவனுடைய இந்த குணத்தை 'பிடிவாதம்'னு உலகம் சொல்லும். அவனை 'திமிர்பிடிச்சவன்'னு திட்டும். பரவாயில்லை. ஆனா, அவனோட இந்த இயல்பு, அவனை தப்பு பண்ண விடாது. எல்லா விஷயத்துலேயும் ஜாக்கிரதையா செயல்பட வைக்கும். 'அடுத்தவங்க உன்னை பார்த்து குத்தம் சொல்லிடக்கூடாது'ன்னு கவனமா இருக்க சொல்லும். எல்லாத்தையும் விட, தவறுகளை தைரியமா தட்டிக் கேட்கத் தூண்டும். ஆமா... திமிர்தான் தைரியத்தை கொடுக்கும். அந்த தைரியம்தான் ஒரு மனுஷனை தலைவனாக்கும்.'எல்லார் மாதிரியும் ஏன் இருக்கணும்?'ங்கற கேள்வியை மனசுல விதைச்சு, ஒரு விஷயத்தை பலகோணத்துல யோசிக்க வைச்சு, ஒரு மனுஷனை கற்பனைவாதியா ஆக்குற இந்த திமிர், தன்னோட எல்லையை தாண்டுறப்போ, கெட்டது பண்ண ஆரம்பிச்சிடுது. சின்னவிஷயம்தான்... 'என்னால முடியும்'னு நல்ல திமிர் நினைக்கும். 'என்னால மட்டும்தான்'னு கெட்ட திமிர் குதிக்கும்.இப்ப சொல்லுங்க...உங்களோட திமிர் தித்திக்குதா?மனநல ஆலோசனைகளுக்கு: 99620 44569

