PUBLISHED ON : ஆக 09, 2015

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்கின்றனர், மருத்துவர்கள். ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்குமாம். ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை, அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம்.
ஒருவர், தினமும் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றுக்கு ஏற்ப, தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது, நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும். அப்படி ஒரு நிலையில், நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை. சாப்பாட்டுக்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.
ஏனெனில், நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர், ஜீரண திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரண பணியை பாதித்து விடும். இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்.
அதே சமயம், உணவுக்கு இடையே ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதால், பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள். உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவு உண்ட அரைமணி நேரத்துக்கு பின் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில ஆலோசனைகள்: உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதே போன்று, உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும், வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க, தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
உணவை, வாயில் மெதுவாக மென்று விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து எளிதாக ஜீரணமடைய வைத்து விடும்.
