PUBLISHED ON : டிச 11, 2022

தேவைக்கு அதிகமாக எது செய்தாலும், அது பிரச்னையில் கொண்டு போய் தான் விடும். இது தண்ணீருக்கும் பொருந்தும் என, சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு நாளைக்கு, ஒரு நபர் எட்டு டம்ளர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என, பல காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. காலையில் எழுந்ததும், லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தால், 'சிஸ்டம் கிளீன்' ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இது, உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதி; யாரும் இதுபற்றி கேள்வியே கேட்டதில்லை.
தோல் பளபளப்பாக இருப்பதற்கு, நீர் எந்த அளவு அவசியம் என்று சமூக வலைதளங்களில், அழகு கலை நிபுணர்கள், பல உதாரணங்களை மேற்கோள் காட்டி பேசுகின்றனர்; ஆனால், இது சரியல்ல என்கிறது ஆய்வு முடிவுகள்.
அவரவரின் உடல் தன்மை, வேலை, வசிக்கும் சூழல், வயது இவற்றை பொருத்தது தண்ணீர் தேவை. விளையாட்டு வீரர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு இயல்பாகவே அதிக நீர் தேவை.
பொதுவாக, 1.5 - 1.8 லிட்டர் போதுமானது என்றாலும், வயதிற்கு ஏற்பவும் நீர் தேவை மாறுபடும். 20 - 40 வயது வரை உள்ள ஆண்களுக்கு தினமும், 4.2 லிட்டர் நீரும், இதே வயதுடைய பெண்களுக்கு, 3.3 லிட்டர் நீரும் தேவைப்படும்.
உஷ்ணம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், மற்றவர்களைவிட கூடுதல் நீர் குடிக்க வேண்டியிருக்கும்.
ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் குடித்தே ஆக வேண்டும் என்ற விதி எப்படி வந்தது?
மேற்கத்திய உணவுகளாக ரொட்டி, அவித்த முட்டை, 'பேக்கிங்' செய்த உணவுகளில், நீர்ச்சத்தே இல்லாமல் வறட்சியாக உள்ளது. இவற்றை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், அதிக அளவு நீர் குடித்தே ஆக வேண்டும்; அப்படி இல்லாவிட்டால், பலவித செரிமான பிரச்னைகள் வரும்.
நம் பாரம்பரிய உணவுகளான காய்கறிகள், பழங்கள், அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் போன்றவை, பிரதான உணவாக இருந்ததால், உடலின் நீர் தேவையில் பாதி, இவற்றில் இருந்தே கிடைத்து விடும்.
இதனால் தான், நம் பாரம்பரிய மருத்துவம், உடல் தேவையை கவனித்து, தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் குடிக்கச் சொல்கிறது.
- 'சயின்ஸ் டெய்லி' இதழ்
