PUBLISHED ON : ஜூன் 18, 2017

தமிழகத்தில் மழைக்காலம் துவங்கி விட்டது. ஆனால் மழையைதான் காணோம். குளிர்க்காற்று வீசும் இந்தக் காலத்தில்தான், காற்றில் வைரஸ் எளிதாக பரவும். பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக் கூடும். பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான், நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அது மட்டுமில்லாது, வீட்டை சுற்றி நீர் தேங்கி இருந்தால், அதில் கொசுக்கள் உருவாகின்றன.
நாளடைவில் தேங்கி இருக்கும் நீர், சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில், அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது, வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி, நோய்களை ஏற்படுத்துகிறது. சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.
மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும், கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில்தான் வழக்கத்தைவிட அதிகம் பேர், நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க, எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம். காய்ச்சல், ஜலதோஷம், இருமல் ஏற்படும் போது, மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
சரியாகி விடும் என்று வீட்டிலேயே, ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து, என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு மழைக்காலத்தில், கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக்காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள், வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால், மழைக்கால நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வீட்டைச் சுற்றி கொசுக்கள், உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் முன், கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது. வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர். எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், ஜலதோஷம், காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை, வீட்டில் தயாரித்து உண்டால், மழைக்கால நோய்கள் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

