PUBLISHED ON : ஜூன் 08, 2025

சர்வதேச அளவில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வில், 14 வயதிலேயே பெண் குழந்தைகளிடம் சிகரெட் பழக்கம் ஆரம்பித்து விடுவதாகவும், ஆண் குழந்தைகள் 18 வயதில் இப்பழக்கத்தை ஆரம்பிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
நம் நாட்டிலும் நகர்ப்புறங்களில் டீன் -ஏஜ் பெண் குழந்தைகள் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாவது சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. சிகரெட் மட்டுமல்ல; எல்லா வகை புகையிலை பொருட்களும் பயன்படுத்துகின்றனர்.
சிகரெட் பழக்கம் இல்லாத 25 சதவீதம் பெண் குழந்தைகள், வீட்டில் மற்றவர்கள் சிகரெட் பிடிக்கும் போது புகையால் பாதிக்கப்படுகின்றனர்.
பாதிப்பு
புகையிலை பொருட்களால் வாய் கேன்சர் பாதிப்பு அபாயம் அதிகம் என்றாலும், பெண் குழந்தைகள் இப்பழக்கத்தில் ஈடுபடும் போது, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால், மாதவிடாய் தொடர்பான பல பிரச்னைகள் வரலாம்.
குழந்தை பெறும் வயதில் மலட்டுத்தன்மை ஏற்படும்; கர்ப்பப்பை வாய் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பம் தரித்தாலும் இயல்பான வளர்ச்சி குழந்தைக்கு இருக்காது. இது தவிர, குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; கருச்சிதைவு அபாயமும் உள்ளது.
பழக்கம் விடுபட
சிகரெட் பழக்கத்தை நிறுத்தப் போகிறேன் என்று தாங்களாகவே முயற்சி செய்பவர்களில், 3 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். நிகோடின் மாற்று தெரபியுடன் முறையான ஆலோசனை பெறும் போதும், 40 சதவீதம் பேர் மட்டுமே இதிலிருந்து வெளியில் வருகின்றனர்.
சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட்டு 100 சதவீதம் வெளியில் வர, இதுவரையிலும் எந்த தெரபியும் இல்லை.
ஒரு சிகரெட் கூட மரபணுவில்மாற்றத்தை துாண்டலாம். சிகரெட் பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளியில் வந்த பின்னரும் பாதிப்பு இருக்குமா என்றால், 10 ஆண்டுகள் நிறுத்தினால் அவருக்கு வரக்கூடிய நுரையீரல் கேன்சர் பாதிப்பு 50 சதவீதம் குறையும்.
ஒரு சிகரெட் பிடித்து முடித்த 20 நிமிடங்களில் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வரும்.
ஒரு ஆண்டு வரையில் சிகரெட் பிடிப்பதை முழுமையாக நிறுத்தினால், இதய நோய்கள் வரும் சாத்தியங்கள் பாதியாக குறையும்.
டாக்டர் ஆர். ஸ்ரீதர், உள்நோக்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர், எம்.ஜி.எம்., கேன்சர் மையம், சென்னை044 - 4251 5151info@mgmcancerinstitute.in