PUBLISHED ON : செப் 23, 2018

மகிழ்ச்சி, துக்கம், கவலை எதுவாக இருந்தாலும், அந்தந்த நேரத்தில் அனுபவித்து, கடந்து போய் விட வேண்டும். எந்த உணர்வையும் எல்லா நேரமும் சுமந்தபடியே அலைபவன் இல்லை நான். ஒவ்வொரு நிமிடத்தையும் அழகாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்.
சினிமா, நிஜ வாழ்க்கை இரண்டிலும் என்னை சுற்றி இருப்பவர்களை மதிக்க வேண்டும்; முடிந்த அளவு, 'பாசிடிவ் எனர்ஜி'யை தர வேண்டும் என்று நினைப்பேன். நடந்து முடிந்த எந்த காரியத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
குறிப்பாக, என்னைப் பற்றி வரும், எதிர்மறை விஷயங்களை மறந்து விடுவேன். எதற்காக அவற்றை நான் நினைவில் வைத்து, பாரத்தை சுமந்து கொண்டே இருக்க வேண்டும்? ஐந்து ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய சட்டை, பேனா என்று, எதையும் இன்று நாம் உபயோகிப்பதில்லை; நம் சிந்தனையும் தினமும் புதியதாக இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.
எப்போதும் நேர்மறை எண்ணங்கள், உணர்வுகளோடே இருக்கிறேன். பயிற்சி செய்தால் எல்லாருக்கும் இது சாத்தியம்.
தமிழகத்தில் என்னை பார்ப்பவர்கள், 'சார் நான் உங்கள் ரசிகன்' என்று சொல்வர். என் நடிப்பை அவர் ரசிக்கிறார். வேறு ஒருவருக்கு இன்னொரு நடிகரைப் பிடிக்கும். சினிமா என்பது, 'ரியாலிட்டி' இல்லை என்பது புரிந்தால், ஒவ்வொருவரின் ரசனையையும் நம்மால் மதிக்க முடியும்.
என் குழந்தைகள் எப்படி ஆக வேண்டும் என்று நான் கனவு காண்பதில்லை. 'டிகிரி முடித்து விட்டு. உனக்கு எது விருப்பமோ அதைச் செய்' என்று, என் அப்பா எனக்குச் சொன்னதையே, என் மகனுக்கும் சொல்லியிருக்கிறேன். விருப்பமானதை தேர்வு செய்து செயல்படுத்தும் சுதந்திரத்தை குழந்தைகளுக்கு தர வேண்டும்.
எழுதுவது, பாடுவதைப் போலவே, சமைப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பெண்கள் பத்திரிகையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சமையல் செய்முறை குறித்து எழுதினேன்.
உறவினர், நண்பர் வீட்டில் அல்லது, 'ரெஸ்டாரன்ட்'டில் சாப்பிடும் உணவு பிடித்திருந்தால், அதை எப்படிச் செய்தனர் என்று கேட்டு எழுதிக் கொள்வேன். நடிப்பு தான் என் வாழ்க்கை என்று, எப்போதும் நான் தீர்மானித்தது இல்லை. நாளையே வேறு எதிலாவது செய்வதில் ஆர்வம் வரலாம்; அதைச் செய்வேன்.
மோகன்லால்
மலையாள சூப்பர் ஸ்டார், கொச்சி.

