PUBLISHED ON : ஏப் 08, 2020

ஊரடங்கில் வீட்டுக்குள் இருக்கும் நமக்கு கொரோனாவால் என்ன ஆகுமோ என்ற அச்சம் இருக்கும். கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் இறப்பதில்லை. 1000 பேர் பாதிக்கப்பட்டால் அதில் 5 பேர் இறக்கலாம். எங்கள் ஊரில், தெருவில் கொரோனா வந்துவிட்டது அனைவரும் இறக்க போகிறார்கள் என்று அஞ்சுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
கேஸ் குளோசர் ரேஷியோ
இன்று உலகளவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா வந்திருக்கிறது. இவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பு; அதில் என்ன முடிவானது என்று கூறுவதை 'கேஸ் குளோசர் ரேஷியோ'என்பார்கள். அந்த வகையில் 3 லட்சம் பேருக்கு 'கேஸ் குளோசர் ரேஷியோ' செய்துள்ளனர். இதில், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் நோய் விடுப்பட்டு வெளியே வந்தது போக 50 ஆயிரம் பேர் இறந்து விட்டனர் என தெரிய வந்துள்ளது. குணமாகலாம் என தீர்மானித்த 7 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் குணமாகலாம் என கண்டறிந்துள்ளனர்.
பல லட்சம் பேர் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் நாம் இருக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு வேறு, இறப்பு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் காசநோய்க்கு பி.சி.ஜி என்ற தடுப்பூசி போடுகிறோம். பல காலமாக நாம் பி.சி.ஜி., ஊசி போட்டிருப்பதால் இங்கு கொரோனா பாதிப்பு குறையும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டில்ஸ்பெயின், அமெரிக்காவில் பி.சி.ஜி, ஊசி போடும் பழக்கம் இல்லை. காசநோய் இருக்கும் நாட்டிற்கு செல்லும் போது மட்டும் தான் போட்டு கொள்வார்கள். இதனால் தான் அங்கு கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அதேசமயம் பி.சி.ஜி, ஊசியால் கொரோனா தாக்கம் குறையும் என்பது 100 சதவீதம் உண்மை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரலாம்.
பெரியவர்களை கவனிக்கவும்
இந்த நேரத்தில் நம் வீட்டில் உள்ள பெரியவர்களை உடல் அளவில் கவனிப்பதோடு மனதளவிலும் நன்றாக கவனிக்க வேண்டும். அவர்கள் உயிருக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். நேற்று கூட அமெரிக்காவில் 85 முதல் 95 வயது வரை உடைய 12 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நம் நாட்டில் பாதிப்பு இன்னும் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 30 நிமிடம் உடற்பயிற்சிசம்பள பிரச்னை, இ.எம்.ஐ., டென்ஷன், வேலைப்பளு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் பேசுங்கள்.
நம் முன்னோர்கள் நாம் இன்று பார்க்கும் உலகத்தை விட தொழில்நுட்பம் குறைவான அழகான உலகத்தை பார்த்தவர்கள். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டும் தான். தாத்தா, பாட்டிகள் நம் குழந்தைகளுடன் விளையாடுவதை விட பெரிய சந்தோஷம் இல்லை.
இளைஞர்கள் வெளியே சுற்றாமல் குடும்பத்துடன் இடைவெளி விட்டு அமர்ந்து சாப்பிட்டு நேரத்தை செலவிடுங்கள். வீட்டில் தான் இருக்கிறோம் என அதிகம் சாப்பிட வேண்டாம். நொறுக்குதீனியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது நம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்கறி, பழங்களை அதிகம் சேர்ப்பது ஆரோக்கியம் தரும். தினமும் 30 நிமிடம் உடற் பயிற்சி செய்யலாம், வீட்டில் நடக்கலாம்.
தவம் கிடக்கும் டாக்டர்கள்
டாக்டர்கள், நர்ஸ்கள் உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கி உங்களுக்காக போராடுகிறார்கள். எந்த டாக்டரும் நோயாளிகள் இறக்க வேண்டும் என நினைப்பது இல்லை. சில விஷயங்களை கைமீறி போவதால் இறப்பு நேரிடலாம். ஆனால், டாக்டர்கள் நோயாளிகளை எப்போதும் கைவிடுவது இல்லை. வலிகளை தாங்கி கொண்டு தான் டாக்டர்கள் மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
நோயாளிக்கு பாதிப்பு ஏற்பட்டால் டாக்டர்களை தாக்குவது, மருத்துவமனையை உடைப்பது மிகவும் தவறு. தீவிர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலர் நாள் கணக்கில் மருத்துவமனையில் தவம் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் டாக்டர்கள் மேல் இருக்கும் 'நெகட்டிவ்' பிம்பம் நீங்க வேண்டும். அதற்கு அரசு சரியான ஒரு வழிகாட்டுதலை வழங்க வேண்டும். ராணுவ வீரர்கள் தம் உயிரை பணயம் வைத்து நம் உயிரை காப்பது போல் டாக்டர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்து தான் மருத்துவ சேவை செய்கிறார்கள்.
இயந்திர வாழ்க்கை மறப்போம்
எங்கள் வீட்டின் அருகே இருக்கும் மரத்தில் கிளிகள் இருப்பதை பார்க்க முடிகிறது. இத்தனை நாட்கள் நான் அதை பார்த்தது இல்லை. மக்கள், வாகன போக்குவரத்து குறைந்து போன இந்த ஊரடங்களில் இது போன்ற உயிரினங்கள் சுதந்திரமாக சுற்றி திரிவதை பார்த்து ரசிக்க வேண்டும். ஊரடங்கு சிரமம் தான். மேலும் சில வாரங்கள் கூட ஊரடங்கு நீடிக்கலாம்.எப்போதும் வேகம், பதட்டத்துடன் தான் சாப்பிட்டு இருக்கிறோம். இயந்திரமயமான வாழ்க்கையை மறந்து குடும்பத்துடன் அமர்ந்து நிம்மதியாக சாப்பிடுங்கள். இயற்கை நமக்கு மீண்டும் வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறது.
நிபுணர்கள், புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் இந்த நம்பிக்கையை கொடுக்கிறேன். அரசு வழிகாட்டுதல்படி பொறுப்பான குடிமகனாக வீட்டில் இருந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.அழகான கொரோனா நாட்கள்இதில் இருந்து வெளியே வந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் யோசிக்கும் போது கொரோனா நாட்கள் நமக்கு எவ்வளவு பயம் கொடுத்தது என்பதை உணர்வோம்.
அதே நேரம் எத்தனை அமைதி, நிம்மதியை தந்த அழகான நாட்கள் என்று மலரும் நினைவுகளை மனதிற்குள் ஓட விட்டு ரசிப்போம் அடி, வலி, எதிர்பாராத இழப்பு வாழ்க்கையில் வரும். இதில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என யோசிக்க வேண்டும். நல்ல சிந்தனை, நம்பிக்கையை எப்போதும் விட்டு விடாதீர்கள்.
- டாக்டர் அஸ்வின் விஜய்
சென்னை
strengthindiamovement@gmail.com
