PUBLISHED ON : ஜூன் 28, 2015
ஆசனம் பழக காலை நேரமே ஏற்றது. குளித்த பின்பு செய்வது நல்லது. மதியம் சாப்பிட்ட நேரத்துக்கும், மாலை ஆசனம் செய்யும் நேரத்துக்கும் நான்கு மணி நேரமாவது இடைவெளி அவசியம்.
காபி, டீ உள்ளிட்ட திரவம் அருந்திய பின்பு, உடனே ஆசனம் செய்யக்கூடாது. காற்றோட்டமுள்ள இடமே நல்லது. இறுக்கமான உடையை தவிர்க்க வேண்டும். ஆசனங்களை சற்று கனமான விரிப்பின் மீது செய்வது நல்லது.
கை, கால் உடம்பு அசைவு மிக மெதுவாகவே இருக்க வேண்டும். பயிற்சி செய்யும்போது, எந்த ஒரு உடலுறுப்பும் விரைப்பின்றி, தளர்த்திய நிலையில், மென்மையாகவும், இயல்பாகவும் இருக்கும்படி பழக வேண்டும்.
பரபரப்பில்லாத மனநிலைக்கு மாறிக்கொள்ள வேண்டும். யோக சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதாவில், சாத்வீக உணவு உண்பவர்கள் தான் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இயலும் என கூறுகிறது. பழங்கள், பச்சை காய்கறிகள், சமைத்த காய்கறி கலவை, பால், தயிர், உலர்ந்த பழங்கள், தேன், அரிசி மற்றும் முளை கட்டிய தானியங்கள் ஆகியவையே சாத்வீக உணவாகும்.
ஆசனம் செய்யும்போது, எவ்வளவு நிமிடங்கள் உடல் உறுப்புகள் அசையாமல் இருக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு ஒரு ஆசனத்தில் இருந்தால் போதும். மிகவும் சிரமப்பட்டு அசைவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டாம். நாள் செல்ல செல்ல, அசைவு குறைந்து நின்று விடும். ஒவ்வொரு ஆசனத்திலும் சுகமான உணர்வு ஏற்பட வேண்டும்.
