PUBLISHED ON : ஜூலை 06, 2021

'கருத்தரித்த ஒன்று முதல் ஒன்பதாம் மாதம் வரை, கர்ப்பிணியர் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்' என, அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை, எழும்பூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடும் முகாமை, தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரேஸ் அகமது நேற்று துவக்கி வைத்தார். அதில், 13 கர்ப்பிணியர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட பின், நான்கு வாரங்கள் கழித்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:பாலுாட்டும் பெண்கள் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதலில், சிறிது தயக்கமாக இருந்தாலும், தடுப்பூசி குறித்து தெளிவுப்படுத்திய பின், போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். கருத்தரித்த, ஒன்றாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை, கர்ப்பிணியர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணியருக்கு, உரிய பரிசோதனைக்கு பின் தடுப்பூசி போடப்படும். கோவாக்சின், கோவிஷீல்டு என, இரண்டு வகையான தடுப்பூசிகளும் சிறந்தது. பக்க விளைவுகளும் குறைவு என்பதால் பயப்பட வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

