PUBLISHED ON : ஜன 17, 2016

உணவு உண்டபின் யோகாசனம் பயிலக்கூடாது. அதிக உணவுக்கு பிறகு நான்கு மணி நேரமும், சிற்றுண்டிக்கு பிறகு இரண்டு மணி நேரமும் கழித்தே, யோகாசனம் மேற்கொள்ள வேண்டும்.
காபி, டீ போன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது. குளிப்பதற்கு முன்போ, அல்லது பின்போ ஆசனங்கள் செய்யலாம். ஆசனம் செய்வதற்கும், குளிப்பதற்கும் அரைமணி நேரம் இடைவெளி இருத்தல் வேண்டும். ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது.
உடலை தளர்த்தும் பயிற்சிகளுக்கு பிறகு, போதுமான அளவு சவாசனம் செய்த பிறகே, ஆசனங்களை செய்ய வேண்டும். ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடம்பை தளர்த்துவது மிகவும் அவசியம். ஆசனத்தின் உச்சநிலையில், எல்லா இறுக்கங்களையும் அகற்ற வேண்டும்.
ஒரு ஆசனத்துக்கும், இன்னொரு ஆசனத்துக்கும் இடையே சில நிமிடங்கள் இடைவெளி வேண்டும். யோகாசனம் செய்த பிறகு, செய்தவரின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ, சோர்வாகவோ இருக்கக் கூடாது.
எவ்வளவு நேரம் களைப்பின்றி, பூரண நிலையில் நிற்க முடியுமோ, அதை விட அதிக நேரம் நிற்க முயலக் கூடாது. வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி, பயிற்சி நேரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். வேகமாக முன்னேற, தினமும் பயிற்சி செய்தல் அவசியம்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஆசனம் செய்தல் கூடாது. சிறந்த வழிகாட்டுதல் இல்லாமல் கர்ப்பிணிகள் கருத்தரித்த, ஐந்தாம் மாதத்திலிருந்து குழந்தை பேற்றுக்கு பின், இரண்டு அல்லது மூன்று மாதம் வரை ஆசனம் பயிலக் கூடாது.
