கொரோனா தொற்று ஏற்பட்டால் யாருக்கு தீவிர சிகிச்சை தேவை
கொரோனா தொற்று ஏற்பட்டால் யாருக்கு தீவிர சிகிச்சை தேவை
PUBLISHED ON : அக் 05, 2020

''இப்போதைய காலகட்டத்தில், சர்க்கரை, அதிக ரத்த அழுத்தம், கிட்னி, கல்லீரல் பிரச்னை உள்ளிட்ட நீண்ட கால நோய் பாதிப்பில் உள்ளவர்கள், அதற்குரிய மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கியம்,'' என, கற்பகம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு துறை பேராசிரியர் டாக்டர் கமலக்கண்ணன் கூறினார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், மயக்க மருந்து நிபுணரின் பங்களிப்பு என்ன?
பொதுவாக, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு, அனைத்து வகை சிகிச்சைகளையும், மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்களே வழங்குவர். அறுவை சிகிச்சையின் போது மற்றும் ஐ.சி.யூ.,வில் உள்ளவரையும் நோயாளிகளை முழுமையாக கவனிக்கும் பொறுப்பு, மயக்கவியல் மருத்துவர்களையே சாரும்.
கொரோனா தொற்று ஏற்பட்டால், தீவிர சிகிச்சை யாருக்கெல்லாம் தேவைப்படும்?
நோயின் தன்மை தீவிரமாக இருந்து, அவர்களுக்கு ரத்த அழுத்தம், உறுப்புகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது, தீவிர சிகிச்சை தேவைப்படும். குறிப்பாக சர்க்கரை, அதிக ரத்த அழுத்தம், அதிக வயது முதிர்வு, சர்க்கரை நோயாளிகள், நுரையீரல் பாதித்த நோயாளிகள், ஆஸ்துமா, சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு, தீவிர சிகிச்சை தேவைப்படலாம். இவர்களுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். கொரோனா தொற்று ஏற்பட்டால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.
தீவிர சிகிச்சையில் ரத்த அழுத்தத்தின் பங்கு என்ன?
பொதுவாக, 140/90 வரை ரத்த அழுத்தம் இருக்கலாம். அதற்கு மேல் ரத்த அழுத்தம் சென்றால், உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 170/110க்கும் மேல் தொடர்ந்து ரத்த அழுத்தம் உயர்வு ஏற்பட்டால், அவர்களை ஐ.சி.யூ.,வில் வைத்து, தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மூளையில் ரத்தக்கசிவு, கிட்னி பாதிப்பு, ரத்தக்குழாய் வெடித்தல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உருவாகலாம்.
ஏற்கனவே உடல் கோளாறுகள் உள்ளவர்கள், இந்த காலகட்டத்தில் என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்?
சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம், கிட்னி பிரச்னை உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட பழக்க, வழக்கங்களை கைவிட வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் காய்கறி, பழங்கள், நடைப்பயிற்சி, யோகாசனங்கள், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் செய்ய வேண்டும்.
இதனால் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாலும், விரைவில் குணமடைய வாய்ப்புகள் உள்ளன.
டாக்டர் கமலக்கண்ணன்
மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்
கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்தவமனை
8220011719
kamal97@gmail.com

