PUBLISHED ON : மார் 22, 2026

'ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் என்றால் என்ன?
தீவிரமான பாக்டீரியா தொற்று ஏற்படும் போது, எந்த ஆன்டிபயாடிக் மருந்துகளும் தொற்றை குணப்படுத்தாது. இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டதற்கு என்ன காரணம்?
கடந்த 36 ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணி செய்கிறேன். முதல் 15 ஆண்டுகள், என் மருத்துவப் பணியின் மிகச் சிறந்த ஆண்டுகள் என்று சொல்வேன். எத்தனை சிக்கலான இதய அறுவை சிகிச்சையாக இருந்தாலும், இரண்டு நாட்கள் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்போம்.
எதிர்பாராத சமயங்களில், வேறு காரணங்களால், நோயாளியின் நிலைமை மோசமடைவது உண்டு. அந்த சமயங்களில் கூட, 'செப்சிஸ்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி, இயல்பை காட்டிலும் அதிகமாக செயல்பட்டு, உடல் முழுதும் அழற்சியை ஏற்படுத்தியோ, தொற்று பாதிப்பை ஏற்படுத்தியோ நாங்கள் பார்த்ததே இல்லை.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், நிலைமை தலைகீழாக மாறி விட்டது. சிறிய அறுவை சிகிச்சையில் தொடங்கி, சிக்கலானது வரை, எது செய்தாலும், தொற்று பாதிப்பு எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயம் வருகிறது.
காரணம், தொற்று ஏற்படுவது இயல்பு தான் என்றாலும், தற்போது நடைமுறையில் உள்ள எந்த ஆன்டிபயாடிக் மருந்தும், பாக்டீரியா தொற்றை அழிப்பதில்லை.
ஏன் இப்படி?
எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மருந்துகளை கட்டுப்பாடில்லாமல் உபயோகிப்பது தான் இந்த நிலைக்கு காரணம். காய்ச்சல், சளி, இருமல் என்று லேசாக பாதிப்பு தலைகாட்டினாலே, உடனடியாக ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். இப்படி தேவையே இல்லாமல், ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட்டதால், கிருமிகள் அதை எதிர்க்கும் திறனை பெற்று விட்டன.
புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளை ஏன் உருவாக்கக் கூடாது என்று கேட்கலாம். பல கோடிக்கணக்கான ரூபாய் செலவு பிடிக்கும் என்பதால், கடந்த பல ஆண்டுகளாக புதிய மருந்துகள் எதுவும் வரவில்லை.
அப்படியே புதிய மருந்துகள் வந்தாலும், அதையும் துஷ்பிரயோகம் செய்தால், அதையும் எதிர்க்கும் திறனை பாக்டீரியாக்கள் பெற்று விடும்.
யார் காப்பாற்றுவது?
இந்த சிக்கலில் இருந்து வெளிவர யாரும் நமக்கு உதவ முடியாது. நாம் தான் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். டாக்டரின் பரிந்துரை இல்லாமல், ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடக் கூடாது. எனக்கு ஆன்டிபயாடிக் கொடுங்கள் என்று டாக்டரை வற்புறுத்தக் கூடாது.
பென்சிலின் மருந்து கண்டுபிடிப்பதற்கு முன், அறுவை சிகிச்சை செய்த நோயாளி, தொற்றினால் இறக்கும் நிலைமை இருந்தது. அந்த நிலைமையை நோக்கி நாம் சென்று விடுவோம் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே மனதில் கொள்ள வேண்டும்.
முடிந்தவரை ஆன்டிபயாடிக் மருந்துகள் உபயோகிப்பதை தவிர்த்து விட வேண்டும்.
டாக்டர் தேவி ஷெட்டி, இதய நோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், நாராயண ஹிருதயாலயா, பெங்களூரூ. 180 0309 0309 / 75090 61830devishetty@narayanahealth.org

