PUBLISHED ON : ஜூன் 21, 2015

உடலில் எற்படும் சின்னச்சின்ன உபாதைகளுக்கு எல்லாம், மருத்துவரை போய் பார்க்க தேவையில்லை. வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் போதும். இந்த வைத்திய முறைகளை காலங்காலமாக பின்பற்றி நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இன்றைக்கு சாதாரண தலைவலிக்கு கூட மாத்திரை, மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
உதாரணமாக பித்தம், வாந்தி, நெஞ்சுகரிப்பு வயிற்று வலி போன்ற பிரச்னைகள், எல்லோருக்கும் இயல்பாக வருவதுதாகும். இதற்கு எளிய மருந்தாக இஞ்சி பயன்படுகிறது. 100 கிராம் இஞ்சியை எடுத்து அதன் மேல் உள்ள தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக்கி
பசும்பாலில் அவித்து, நிழலில் உலர்த்தி காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும், அதை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது ஒரு டீஸ்பூன் பொடியுடன், சர்க்கரை கலந்து சாப்பிட்டால் போதும். இதனால் நெஞ்சுக்கரிப்பு, பித்தம், வயிற்றுவலி,
குணமாகும். இதுபோல் பல நோய்களுக்கு எளிய வீட்டு வைத்திய முறை உள்ளது.
வாயுத்தொல்லை நீங்கும்: வாயுத்தொல்லை, பசியின்மை, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு சோற்றுக்கற்றாழை சாற்றை சாப்பிட்டால் நலம் பெறலாம். ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.
பசியின்மை நீங்க: துளசி விதைப்பொடி, திப்பிலிப் பொடி இவைகளை சம அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி நல்ல பசி உண்டாகும். சாப்பிடப் பிடிக்காமல் அவதிப்படுவோர், கிராம்பு, நிலவேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஒன்றை தேவையான அளவு நீரில் போட்டு, நன்கு காய்ச்சி, கஷாயமாக்கி குடித்துவர நன்கு பசி எடுக்கும்.
வயிற்றுக்கடுப்பு நீங்க: வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுத்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும். வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணமடையும்.
வயிற்றுப் பூச்சி வெளியேற: மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தித் தூள் செய்து தேனில் குழைத்துக் கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.
வயிற்றுப் போக்கு: சுண்டைக்காய் அளவு ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயிற்றுப் போக்கும் நின்றுவிடும். தயிர், வெந்தயம், சர்க்கரை மூன்றையும் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.
அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும். வெந்நீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும். பசியும் எடுக்கும்.
