PUBLISHED ON : ஜூலை 01, 2021

மூன்றாவது அலை வைரஸ் தாக்கத்தை எதிர்பார்த்து இருக்கும் நாம், அதை எதிர் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம். அலை அலையாக வைரஸ் ஏன் பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் ஒரு ஆர்.என்.ஏ., வகை வைரஸ் என்பதால், இது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, பல விதங்களிலும் மரபியல் ரீதியில் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.
வைரஸ் அமைப்பு ரீதியில் அப்படியே இருந்தாலும், மரபணுவில் மாற்றம் அடையும். ஒவ்வொரு முறை மாற்றம் அடையும் போதும் மண்ணைக் காட்டிலும் வீரியத்துடன் அதிக வேகத்தில் பரவும் திறனும் பெற்று விடுவது அதன் இயல்பு.
இவ்வாறு பலமுறை மாற்றம் அடைந்து நம்மை தொற்றும் போதும், அதனால் ஏற்படும் அறிகுறிகள் வேறு மாதிரியாக இருக்கும். முதல் அலை தாக்கத்தில், காய்ச்சல், தலைவலி, இருமல், சுவையின்மை, வாசனை தெரியாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தன.
இதுவே இரண்டாவது அலையில், வயிற்றுப்போக்கு, எதிர்பாராமல் உடல் வெப்பம் அதிகரிப்பு, உடல் அயர்ச்சி என்று முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகள் தோன்றின. இரண்டாவது அலையில் அடுத்தடுத்து இரண்டு முறை உருமாற்றம் அடைந்தது.
'ஸ்பானிஷ் புளூ' தாக்கம் 1918 முதல் ஏற்பட்டு, தொடர்ச்சியாக அதன் பாதிப்பு, அடுத்த 10 ஆண்டுகள் இருந்தது. கொரோனா வைரசும் அப்படித்தான். மூன்றாவது அலை எப்போது வரும், என்ன மாதிரியான அறிகுறிகளை தரும் என்பதெல்லாம், நோய் தொற்று ஏற்பட்ட பிறகே தெரியும்.
முன் கூட்டியே கணிக்க முடியாது. ஆனாலும் அடிப்படையில் சார்ஸ் வகை வைரஸ் சுவாசப் பாதையைச் தாக்கும் என்பதை மட்டும் சொல்ல முடியும். முதல் இரண்டு அலையில் கிடைத்த அனுபவத்தில், மூன்றாவது அலையின் தாக்கத்தை குறைக்க, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை பின்பற்றினால், கொேரானாவை கட்டுப்படுத்த முடியும்
மூன்றாவது அலை குழந்தைகளை ஏன் அதிகம் பாதிக்கும் என்று எளிதாக புரிந்து கொள்ள முடியும். 18 வயதிற்கு மேல், தடுப்பூசி இருக்கிறது.குழந்தைகளுக்கு மருத்துவ பாதுகாப்பு இல்லாத போது நாம் தான் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கெட், 'டூ வீலர்', என்று வெளியில் சகஜமாக அழைத்துச் செல்வதை பார்க்க முடிகிறது.
இப்படி செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் காட்சி பொருள் இல்லை. இன்னும் சில மாதங்களுக்கு வெளியில் எங்கும் அனுப்ப வேண்டாம். நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொற்று வரும். நாம் சுயக் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பாதுகாப்பு. மொட்டை மாடியில் தினமும் வெயிலில் குழந்தைகளை இருக்க செய்வது 'விட்டமின் டி' கிடைக்க உதவும்.
நல்ல புரதச் சத்து மிகுந்த உணவு கொடுப்பதும் அவசியம். தினமும் குறைந்தது 8 மணி நேர துாக்கம் முக்கியம். 'ஆன்லைன்' வகுப்பு என்று அதிக நேரம் 'லேப்டாப்' முன் இருப்பதை தவிர்க்க செய்வது நல்லது. ஆழ்ந்த துாக்கம், விட்டமின் டி இரண்டும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரம். அடுத்த ஆறு மாதங்களுக்கு வெளி ஆட்களை வீட்டிற்கு அனுமதிக்க வேண்டாம், நீங்களும் யார் வீட்டிற்கும் செல்ல வேண்டாம்.
டாக்டர் என்.தீபா,
முதல்வர்,
சவீதா காலேஜ் ஆப் பார்மசி,
சென்னை

