PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM

ராஜஸ்தானுக்கே உண்டான வறண்ட மணலும், வெப்பமான காற்றும் நிறைந்த ஊர்களில் ஒன்றுதான் பிகானீர்.
அங்கு சில சமயம் வெப்பம் 45 டிகிரியைக்கூடத் தாண்டி தகிக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் மட்டுமே அமுதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்.
அந்த தண்ணீர் கிடைக்காமல் பறவையினங்கள் பாடய்பாடும் .
அந்த ஊரில் மற்ற பறவைகளை விட கிளிகள் அதிகம். சில கிளிகள் உஷ்ணம் தாங்காமல் மயங்கிவிழும்,சில கிளிகள் மயங்கிப் போன நிலையில் எங்கே அமர்கிறோம் என்பது தெரியாமல் மின் கம்பிகளில் அடிபட்டு விழும்.
அந்த இடம்தான் பிகானீர் விலங்கு மீட்பு மையம்
பெயர்தான் விலங்கு மீட்பு மையம் ஆனால் தொன்னுாறு சதவீதம் கிளிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் மையமாகவே செயல்படுகிறது.
தன் வீட்டு மாடிகளில் பறவைகளுக்கு குடிநீர் வைக்க ஆரம்பித்த சூரிய பிரகாஷ்சின் அடுத்த கட்ட நகர்வே இந்த மீட்பு மையம்,நிலமும் வளமும் இருந்ததால் யாரையும் எதிர்பாரமல் இந்த மீட்பு மையத்தை துவக்கி இதற்கென சில பணியாளர்களையும் நியமித்து கடந்த சில வருடங்களாக மையத்தை செம்மையாக நடத்திவருகிறார்.
இந்த மையத்திற்கு எடுத்து வரப்படும் கிளிகளுக்கு முதலில் மருத்துவம் தரப்படுகிறது பின் நல்ல உணவு கொடுத்து பாதுகாப்பான ஒய்விடம் கொடுத்து அது தன் பழைய நிலைக்கு திரும்புவரை கண்ணும் கருத்துமாக பராமரிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கிளிகள் பல இங்கு இருக்கின்றன அவை தங்களை அன்போடு கவனித்து சாப்பாடு கொண்டு வருபவரைப் பார்த்ததும் தோளில் தலையில் கைகளில் உட்கார்ந்து கொஞ்சும் அழகே தனி
மனிதனின் வளர்ச்சி என்பது அவன் காட்டும் கருணையில்தான் உள்ளது.
-எல்.முருகராஜ்

