PUBLISHED ON : நவ 14, 2025 08:41 PM

உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் ஒருவர்—சாலுமரதா திம்மக்கா.
அவர் பெரிய கல்வியாளர் அல்ல.பெரும் செல்வந்தர் அல்ல.புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனையுமல்ல.
ஆனால், தனக்காக அல்லாமல்மக்களுக்காக மரம் வளர்த்தவர்.அந்த அசாதாரணச் செயலே அவரை பத்மஸ்ரீ விருது பெறச் செய்தது.
மரங்களுக்கு உயிர் பாசம் காட்டி,அந்த மரங்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மனிதகுல மாணிக்கம்,இன்று 114 வயதில் ஓய்ந்துவிட்டது.
கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ளகூப்பி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த திம்மக்கா,பள்ளி படிப்பு எதுவும் பெறவில்லை.விவரம் தெரிந்த நாள் முதல் விவசாய கூலி வேலை செய்தார்.
தினமும் நீண்ட தூரம் நடந்தே தன் பணியிடத்துக்கு செல்வார்.அவரது பாதையில் வெயில் சுட்டெரிக்கும்.எங்கும் நிழல் இல்லை.“இங்கே மரம் இருந்தால் எத்தனை பேருக்கு நன்மை…”என்ற எண்ணம் அவருள் துளிர்த்தது.
ஆனால் மரம் தானாகவே வராது.“நாம்தான் நட்டாக வேண்டும்”என்ற முடிவுக்கு வந்தார்.
முதலில் ஒரு மரக்கன்றை நட்டார்.அதை குழந்தையைப் போல தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்தார்.அது துளிர்த்ததும்—மகிழ்ச்சி இரட்டிப்பாக, மேலும் கன்றுகளை நட்டார்.
இப்படி தொடர்ந்து…
நான்கரை கிலோமீட்டர் தூரம் முழுவதும் மரங்களை நட்டு,அவற்றை வேரூன்றி வலுவாக வளர்த்து உலகுக்கு கொடையாக கொடுத்தார்.
பின்னர் அவர் நட்ட வழியெல்லாம் நிழல் தரும் பெரிய மரங்களாக வளர்ந்தபோது,அந்த பாதையைப் பயன்படுத்தியோர் வியந்து,“சோலைக்குள் நடப்பது போல இருக்கிறது” என்று புகழ்ந்தனர்.
இடையில் திம்மக்காவுக்கு சிக்கையா என்பவருடன் திருமணம் நடந்தது.அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
ஆனால் திம்மக்கா சிரித்தபடி சொல்வார்:“இந்த மரங்கள்தான் எங்கள் குழந்தைகள்.”
அவரது இந்தப் பணியில் கணவரும் தோள்கொடுத்தார்.அதனால் திம்மக்கா கர்நாடகத்தில்சாலுமரதா திம்மக்கா—அதாவது மரங்களின் வரிசை திம்மக்கா என்ற பெயரை பெற்றார்.
ஒரு காலத்தில், அவர் நட்ட வழியில் சாலை போட அரசு திட்டமிட்டது.அதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என நினைத்தனர்.
அந்தச் செய்தி கேட்டதும்,திம்மக்கா முதல்வரையே நேரில் சந்தித்து“என் குழந்தைகளை வெட்டாதீர்கள்” என்று கண்ணீருடன் வேண்டினார்.
அவரது அன்பும் மரங்களுக்கான பாசமும் கண்டுஅரசும் மனம் மாறி—சாலையை வேறு வழியாக மாற்றியது.
“மரம் மனிதனைவிட உயர்ந்தது.அதற்கு தெரிந்தது எல்லாம் பிறருக்கு நன்மை செய்வதே.”என்று அடிக்கடி சொல்வார் திம்மக்கா.
அவரை சந்திக்க உலகம் முழுவதும் இருந்து மக்கள் வந்தனர்.அவரது வாழ்வும் செயலும் அனைவரையும் பிரமிக்கச் செய்தது.
இன்று அவர் இந்த உலகில் உருவில் இல்லை.ஆனால் அவர் நட்ட ஆயிரக்கணக்கான மரங்கள்—அவை விடும் காற்றில்திம்மக்காவின் உயிரும் உள்ளமும் கலந்துகிடக்கிறது.
- எல். முருகராஜ்

