PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM


இந்து ரெபேக்கா வர்கீஸ்: கிறிஸ்துவரான இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பிற்காகச் சென்னை வந்தார். அதே கல்லூரியில் தான் முகுந்த் படித்தார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு அவர்களுக்குத் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2011ம் ஆண்டு அர்ஷியா முகுந்த் என்ற பெண் அழகிய குழந்தை பிறந்தது. இருவரும் பல ஆண்டுகள் காதலித்த போதிலும், அவர்களின் திருமண வாழ்க்கை ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்து ரெபேக்காவுக்கு 31 வயதான போது, அவரது கணவர் மேஜர் முகுந்த் வரதராஜ் 2014ல் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது இந்த தம்பதியின் குழந்தைக்கு வெறும் 3 வயதுதான் ஆகியிருந்தது.
முகுந்த் இறந்த முதல் இரண்டு ஆண்டுகளில், நான் நிறைய நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். அப்போது பெருமையாக இருந்தது. அதேநேரம் துக்கமாகவும் இருந்தது.நாளடைவில் நான் எனது மகளுக்காக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். இதன் காரணமாகவே கடந்த எட்டு வருடங்களாக முகுந்த் பற்றிபேசவில்லை எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த நேரத்தில்தான் டைரக்டர் ராஜ்குமார் வந்து பேசினார். இது முகுந்திற்கு பெருமை சேர்க்கும் என்பதற்காக மட்டுமே ஒப்புக்கொண்டேன்.. அமரன் திரைப்படம் அவரை மீண்டும் உயிரோடு கொண்டு வந்தது போல..
இப்போது ரெபேக்கா வர்கீஸ் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஸ்டன்ஸ் என்ற இடத்தில் பள்ளி ஆசிரியராக இருந்து வருகிறார். அமரன் படத்திலேயே அவர் ஆசிரியை ஆக பயிற்சி பெறுவது போலக் காட்டப்பட்டு இருக்கும்.
அமரன் படம் வந்த பிறகு அதில் இந்து ரெபேக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பு இந்துவிற்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது இந்த நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் சல்யூட் டூ மதர் நிகழ்வில் சென்னையில் கவுரவிக்கப்டுகின்றனர் என்ற தகவல் வந்தததன் அடிப்படையில் இந்த ரெபேக்கா கலந்து கொள்வார் என்ற எண்ணத்தில் அவரைப் பார்க்க திரளான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் இதோ மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்படுகின்றனர் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அனைவரது பார்வையும் மேடையை நோக்கியே இருந்தது.
பின்னர் முகுந்த் வரதராஜனின் தந்தையிடம் பேசும்போது மருமகள் இந்து ரெபேக்கா ஆஸ்திரலேலியாவில் இருந்து வரவில்லை என்று குறிப்பிட்டார்.
உள்ளபடியே அவர் ஒரு இரும்புப் பெண்மணிதான்,தான் சொன்னபடி தனது மகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுவிட்டார்.
-எல்.முருகராஜ்

