PUBLISHED ON : பிப் 13, 2026 05:42 PM

உத்தரப்பிரதேச மாநிலம், புனித நகரமான பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது பழமையான நாகேஸ்வர நாத் மகாதேவ் கோவில். இந்தக் கோவில் மற்ற சிவஸ்தலங்களைப் போலல்லாமல், ஒரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமான காட்சியைக் கொண்டுள்ளது. இங்கே சிவபெருமானின் கருவறையை விட, கோவிலைச் சுற்றியுள்ள இரும்பு வேலிகளே பக்தர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. காரணம், அந்த வேலிகள் முழுவதுமே ஆயிரக்கணக்கான பூட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

திருமணத் தடை, தீராத நோய், தொழில் நஷ்டம் என வாழ்வில் முட்டுக்கட்டையாக இருக்கும் 'தடைகளை' இந்தப் பூட்டோடு சேர்த்து அங்கேயே பூட்டி விடுவதாக ஐதீகம். அந்தப் பூட்டு எப்படி இரும்பு வேலியில் சிக்கிக்கொள்கிறதோ, அதுபோலவே கஷ்டங்களும் அங்கே தங்கிவிடும்; அதன் பிறகு வாழ்வின் புதிய கதவுகள் திறக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 
சாதாரண நாட்களிலேயே பூட்டுகளால் நிறைந்திருக்கும் இந்த வேலி, மகாசிவராத்திரி அன்று ஒரு கலைக்கூடமாகவே மாறிவிடும். பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் வரிசையில் நின்று தங்கள் நம்பிக்கையைப் பூட்டாகப் பூட்டிச் செல்வதைக் காண்பது ஒரு தனித்துவமான அனுபவம்.
இது போன்ற சடங்குகள் வெறும் சடங்குகளாக மட்டும் பார்க்கப்படாமல், மனித மனதின் நம்பிக்கையையும், போராட்டங்களிலிருந்து விடுபடத் துடிக்கும் ஒரு ஆன்மீகத் தேடலையும் பிரதிபலிக்கின்றன.
-எல்.முருகராஜ்

