வாழ்ந்து பார்க்க வேண்டும்,பிறரை வாழவைத்து பார்க்க வேண்டும்
வாழ்ந்து பார்க்க வேண்டும்,பிறரை வாழவைத்து பார்க்க வேண்டும்
PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM
பிகேஎப்.,ஆடிட்டிங் நிறுவனத்தின் 45 ஆம் ஆண்டு விழா சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.
விழாவின் கதாநாயகர் டாடா குழுமங்களின் நிர்வாக அதிகாரி சந்திரசேகரன்
இந்த விழாவில் ஹைலைட்டாக சமூகத்திற்காக பாடுபடுபவர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு அவரது கையால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்
அவர்களில் பலரையும் கவர்ந்தவர் ப்ரீத்தி சீனிவாசன். சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் துணையோடு மேடைக்கு வந்த இவருக்கு தற்போது வயது 44
இவர் தன் 18 வயதில் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் தலைவியாக திகழ்ந்தவர்.
தந்தையின் பணி காரணமாக அமெரிக்காவில் வளர்ந்து அங்கே படிப்பில் பல சாதனைகள் புரிந்தவருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. கிரிக்கெட் வாழ்க்கைக்கு அமெரிக்கா சரிப்பட்டு வராது என்பதால் இந்தியா வந்தார், மளமளவென அதன் உச்சத்தை தொட்டார்.
ஒரு விபத்து அவரது வாழ்க்கையையே அடியோடு மாற்றிப்போட்டுவிட்டது.கழுத்திற்கு கீழ் உறுப்புகள் செயல்படவில்லை, முதுகுத்தண்டு வட பிரச்னை என அறியப்பட்டது. ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் நிற்காகமல் துறுதுறுவென்று ஒடிக்கொண்டிருந்தவர் ஒரே இடத்தில் படுத்த படுக்கையில் இருக்கவேண்டிய நிலை.
இந்த நிலையில் துாண் போல இருந்த தந்தையும் மரணமடைய இவரது உடலும் உள்ளமும் பெரிதும் பின்னடைவை சந்தித்தது, இரண்டு முறை மரணத்தை தொட்டு திரும்பினார்.இறக்க வாய்ப்பு இருந்தும் இறைவன் நம்மை வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும் என நினைத்தார்.
தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டவோ துாக்கிவிடவோ ஏன் எந்த அமைப்பும் இல்லை என்று வருத்தப்பட்டவர் பின் நாமே ஏன் அப்படிப்பட்ட அமைப்பை துவங்கக்கூடாது என்று சிந்தித்தார்.
அந்த சிந்தனையின் செயல்வடிவம்தான் 'சோல்ப்ரீ' என்ற தொண்டு மையம்.நன்கொடைகள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படும் இந்த மையம் தற்போது நாடு முழுவதும் அறியப்பட்ட நேர்மையான உதவும் மையமாகும்.
திருவண்ணாமலையில் இருந்து செயல்படும் இந்த அமைப்பானது, முதுகுத்தண்டு வட குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உபகரணம் மற்றும் ஆலோனை வழங்குவது உள்ளீட்ட பல உதவிகள் செய்து வருகிறது.நாடு முழுவதும் பலர் பலன் அடைந்து வருகி்ன்றனர்.
இதற்காக ப்ரீத்தி சீனிவாசன் நிறைய உழைக்கிறார் ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக மேடைகளில் வலம் வருகிறார்.
முதுகுத்தண்டு வட பாதிப்பு உள்ளவர்களை பராமரிப்பது எளிய குடும்பத்தினருக்கு பெரும் சிரமம் என்பதால், அவர்களைத் திரட்டி 'தற்சார்பு கிராமம்' என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து,அவர்களை ஆனந்தமாக நிம்மதியாக,ஆற்றல் உள்ளவர்களாக வாழவைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளார் இவரது முயற்சியை பாராட்டியே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ப்ரீத்தி சீனிவாசன் முயற்சி திருவினையாகட்டும்.தொடர்புக்கு preethi@soulfree.org
-எல்.முருகராஜ்.