PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM


மகராஷ்ட்ரா மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம்,
நகரத்தைப் போலவே விரிவான பெரிய ரயில் நிலையம்.
பெரிய நகரங்களை இணைக்கும் ரயில்கள் இருபத்து நான்கு மணி நேரமும் வருவதும் போவதுமாக இருக்கின்றன
இங்கு வந்து இறங்கும் பயணிகளின் லக்கேஜ்களை சுமந்து செல்ல ரயில்வே கூலிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்
அவர்களில் வித்தியாசமாக ஒரு பெண் கூலியும் காணப்படுகிறார்
பெயர் ரூனாலி
பயணிகளின் இரண்டு மூன்று லக்கேஜ்களைக்கூட அநாயசமாக தலையில் துாக்கிக் கொள்கிறார், சிறிய லக்கேஜ்களை வாங்கி தோளில் மாட்டிக் கொள்கிறார், வயதான பயணியாக இருந்தால் அவர்களையும் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு விரும்பும் இடத்தில் கொண்டு போய் பத்திரமாக சேர்க்கிறார்..
நாட்டின் முதல் பெண் கூலித்தொழிலாளியாக கருதப்படும் ரூனாலி இந்த தொழிலுக்கு வந்தது எப்படி?.
இவரது கணவர் இதே நாக்பூர் ரயில் நிலையத்தில் கூலியாக இருந்தார்,திருமணமாகி இரண்டு வருடத்தில் திடீரென விபத்தில் இறந்துவிட்டார்.
கணவர் ரயில்வே கூலியாக வேலை பார்த்த 'பேட்ஜ்'(லைசென்ஸ்) மட்டுமே துணயைாக நின்றது.
கணவரின் ஆசியை நெஞ்சிலும் அவர் விட்டுச் சென்ற ' பேட்ஜை' கையிலும் மாட்டிக்கொண்டு ரயில்வே பெண் கூலியாக களமிறங்கினார்.
பலமுறை படிக்கட்டுகளில் ஏறி இறங்கவேண்டும், பயணிகளுக்கு பிடித்தபடி இயங்க வேண்டும்,நேரம் காலம் பார்க்காது உழைக்க வேண்டும் என்பதுடன் ஆண்கள் கூட துாக்க சிரமப்படும் சுமைகளை கவனமாக துாக்கவேண்டும் என்பது போன்ற சிரமங்களை ரூனாலி தாங்குவாரா? என்பதே ஆரம்பத்தில் பலரது சந்தேகமாக இருந்தது, ஆனால் தனது பெண்ணை படிக்கவைத்து ஆளாக்கவேண்டும் என்ற வைராக்கியம் எல்லா சிரமங்களையும் தவிடு பொடியாக்கியது.
இதோ ரயில்வே கூலியாக மூன்றாண்டு காலம் வெற்றிகரமாக கடந்துவிட்டார், நான்தான் வேண்டும் என்று ரயில் ஏறும்போதே என்னை 'புக்' செய்து கொண்டு வரும் ரெகுலர் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளனர்,தனியாக லக்கேஜ்களுடன் வரும் பெண் பயணிகளின் முதல் தேர்வு நான்தான்,சக ஆண் கூலி தொழிலாளர்கள் நிறைய உதவுகிறார்கள்,போதுமான வருமானம் கிடைக்கிறது மகள் சிறந்த பள்ளியில் நன்கு படிக்கிறார்,என்னைச் சார்ந்த உறவுகள் நிம்மதியாக இருக்கின்றனர்,இதனால் சுமைகள் சந்தோஷம் தருகின்றன என்கிறார் ரூனாலி.
-எல்.முருகராஜ்

