PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM


உலகின் உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரம் ஏறுவது என்பது சாகசத்தின் உச்சபட்சமாகும்.
இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருடத்திற்கு சராசரியாக 300 பேர் இறந்தாலும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் உடல் ஊனமுற்றவர்கள், சிறுவர், சிறுமிகள் சாதனை படைக்கும் போது அது பெரிதும் பேசப்படுகிறது.
அந்தவகையில் இப்போது இரண்டரை வயது பெண் குழந்தை 'எவரெஸ்ட் பேஸ் கேம்ப்' வரை சென்று வந்து சாதனை படைத்துள்ளார்.
போபாலை சேர்ந்த இன்னும் பள்ளிக்கு கூட செல்லாத ஜின்னி என்றழைக்கப்படும் சித்தி மிஸ்ராவின் தாய் பாவ்னா மிஸ்ராவும், தந்தை மஹிம் மிஸ்ராவும் மலையேற்ற வீரர்களாவர்.
இவர்கள் மலையேற்றப் பயிற்சிக்கு செல்லும் போது தங்களது குழந்தையான ஜின்னியையும் அழைத்துச் செல்வர் குழந்தை தங்களைப் போலவே பனிமலைச் சூழலுக்கு ஒத்துவந்தாலும் காலம் வரட்டும் என்று காத்திருந்தனர்.
லே லடாக் போன்ற சிறிய பனி சூழ்ந்த இடங்களுக்கு குழந்தையை அழைத்துச் சென்று எந்த அளவிற்கு தாக்குப்பிடிக்கிறார் என்று பார்த்தனர்.குழந்தை எல்லாவிதமான சோதனைகளையும் கடந்து எவரெஸ்ட் ஏறத்தயாரான போது இரண்டரை வயதானது.
எவரெஸ்டின் முழு உயரம் என்பது 8,848 மீட்டராகும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் என்பது 5,364 மீட்டராகும். ஆரம்பகட்ட மலையேறுபவர்கள் பெரும்பாலும் இந்த பேஸ்கேம்ப் வரையிலுமே சென்று திரும்புவர்.
மலையேறும்போது பெரியவர்களுக்கே மூச்சு திணறல், தலைவலி, மலைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் குழந்தை ஜின்னி அப்படிப்பட்ட எவ்வித உபாதைகளுக்கும் ஆளாகாமல் ஜாலியாக சென்று தாயுடன் திரும்பியுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐந்து வயது பிரிஷாதான் இதுவரை இந்த சாதனையை படைத்த சிறு வயது பெண் குழந்தை என்ற நிலை இருந்தது அதனை இப்போது ஜின்னி மாற்றியிருக்கிறார்.
மிக விரைவில் எவரெஸ்டின் உச்சிவரை சென்று ஜின்னி சாதனை படைப்பார் என்கிறார் அவரது தாய் நம்பிக்கையுடன்., அதை ஆமோதிப்பது போல ஜின்னியும் சிரிக்கிறார்.
-எல்.முருகராஜ்

