PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

நாயகன் படத்தில் ஒரு காட்சி வரும்
தனது சேரிப்பகுதியில் அடிபட்ட ஒருவரைக் காப்பாற்ற அவசரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் கிடைக்காது,இதனால் வெறுத்துப் போன அந்தப் பகுதிவாசி தாதாவாக நடித்திருக்கும் கமல் 'நாளைக்கே நாலு ஆம்புலன்ஸ் வாங்குகிறோம்' என்பார்.அதே போல வாங்கி அந்தப் பகுதியில் நிறுத்துவார்.
அவர்,கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரைச் சேர்ந்தவர், அனி,27.
வளர்இளம் பருவத்தில் தன்னை திருநங்கையாக உணர்ந்தார் சிறிது காலம்தான் கவலைப்பட்டார் அதன்பிறகு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாலும் சமூகம் படிக்கவிடவில்லை ஒரு டிகிரி வாங்குவதற்குள் ஏகப்பட்ட அவமானங்கள் அவலங்களை சந்தித்தார்.
அவமானங்களில் முக்கியமானது தன்னை ஆட்டோ ஒட்டுனர்கள் வண்டியில் ஏற்ற மறுத்ததுதான்,இதற்காகவே நாம் சம்பாதித்து ஆட்டோ வாங்கி திருநங்கைகளுக்காக இலவசமாக இயக்கவேண்டும் என்று உறுதி பூண்டார்.
அதற்கேற்ப இவருக்கு திரைப்பட வாய்ப்பு தேடிவந்தது,'சிவலீலா' என்ற என்ற படம் இவருக்கு புகழைக் கொடுத்தது அதன்பிறகு நடித்து வரும் படங்கள் பொருளைக் கொடுக்கிறது.பணத்தை சேர்த்துவைத்து நான்கு ஆட்டோக்கள் வாங்கி சிரமப்படும் ஏழை ஓட்டுனர்களுக்கு குறைந்த வாடகைக்கு விட்டுள்ளார்,தனக்கு சொந்தமான ஆட்டோவில் 'திருநங்கைகளுக்கு இலவசம்' என்று எழுதிப்போட்டு அவர்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகுத்துள்ளார்.
இது தவிர பல்வேறு சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.இன்னும் கொஞ்சம் சம்பாதித்ததும் திருநங்கைகள் தங்குவதற்கு ஒரு இல்லம் கட்டவேண்டும் அதில் மூத்த திருநங்கையர்களை இலவசமாக பராமரிக்கவேண்டும் என்பதை எதிர்கால கனவாகக் கொண்டுள்ளார்.
இவரது கனவுகள் நனவாகட்டும்.