sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

திரும்பி வருகிறார் திருமங்கை ஆழ்வார்!

/

திரும்பி வருகிறார் திருமங்கை ஆழ்வார்!

திரும்பி வருகிறார் திருமங்கை ஆழ்வார்!

திரும்பி வருகிறார் திருமங்கை ஆழ்வார்!


PUBLISHED ON : மார் 05, 2026 04:25 PM

Google News

PUBLISHED ON : மார் 05, 2026 04:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் அமைந்துள்ளது பழமையும் பெருமையும் மிக்க அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில். கலை நயம் மிக்க கல் மற்றும் வெண்கலச் சிலைகள் இக்கோயிலின் பெரும் பொக்கிஷங்களாகும். அத்தகைய அரிய வெண்கலச் சிலைகளுள் ஒன்றுதான் திருமங்கை ஆழ்வார் சிலை.Image 1544749பன்னிரு ஆழ்வார்களில் இறுதியானவரான திருமங்கை ஆழ்வார், மற்ற ஆழ்வார்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். சோழ மன்னனின் படைத்தளபதியாக இருந்து, பின்னர் 'ஆலிநாடன்' எனும் பெயரில் குறுநில மன்னராக ஆட்சி புரிந்தவர். பின்னாளில் இறைவனின் பேரருளைப் பெற்றுத் தீவிர வைணவ அடியாராக மாறினார். அவர் ஒரு போர் வீரராக இருந்தவர் என்பதால், அவரது சிலைகள் மற்ற ஆழ்வார்களைப் போலக் கைகூப்பி நிற்காமல், ஒரு கையில் வாளும் மறு கையில் கேடயமும் ஏந்திய வீரியமான தோற்றத்தில் வடிக்கப்படுவது வழக்கம்.Image 1544748கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் (சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்) இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்தச் சிலை, 60 செ.மீ உயரமும் 20 கிலோ எடையும் கொண்டது. இதன் இன்றைய சர்வதேச மதிப்பு சுமார் ₹5 கோடி வரை இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.Image 1544750துரதிர்ஷ்டவசமாக, 1967-ஆம் ஆண்டு இச்சிலை திருடப்பட்டது. திருடியவர்கள் தாங்கள் திருடிய அசல் சிலையைப்போலவே ஒரு போலிச் சிலையைச் செய்து அங்கேயே வைத்துவிட்டனர். இதனால், பல தசாப்தங்களாக இச்சிலை திருடு போனது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. கடத்தப்பட்ட அந்த அசல் சிலை, பல கைகள் மாறி இறுதியில் லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தால் பெருந்தொகை கொடுத்து வாங்கப்பட்டு, அங்கே ஒரு காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தது.

2019-ஆம் ஆண்டு, லண்டன் அருங்காட்சியகத்திற்குச் சென்ற சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமார் என்பவரது பார்வையில் இச்சிலை தட்டுப்பட்டது. சிங்கப்பூரில் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியாற்றும் இவர், கடத்தப்பட்ட இந்தியச் சிலைகளை மீட்கும் பணியைத் தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.

அவர் தனது தரவுத்தளத்தில் இருந்த, 1957-ஆம் ஆண்டு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட தாடிக்கொம்பு கோயில் புகைப்படங்களுடன் லண்டனில் இருந்த சிலையை ஒப்பிட்டுப் பார்த்தார். சிலையின் நுணுக்கமான வேலைப்பாடுகள், பீடத்தின் அடையாளங்கள் மற்றும் வாளின் அமைப்பு ஆகியவை நூறு சதவீதம் ஒத்துப்போவதை உறுதி செய்து, ஆதாரங்களைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு அனுப்பினார்.

தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் இந்தியத் தூதரகம் வழங்கிய வலுவான ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சிலையைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டது. இதன் அடிப்படையில், நேற்று லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில், அருங்காட்சியக அதிகாரிகள் சிலையை இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமியிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.Image 1544751இன்னும் சில நாட்களில் இச்சிலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். சுமார் அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஒரு போர் வீர ஆழ்வார் தனது சொந்த மண்ணிற்குத் திரும்புவது, கடத்தப்பட்ட பிற இந்தியச் சிலைகளை மீட்பதற்கான புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

திருமங்கை ஆழ்வார் என்ற தங்கள் ஊர் பொக்கிஷத்தை வரவேற்கத் தாடிக்கொம்பு பக்தர்களும் தமிழக மக்களும் இப்போது முதலே மிகுந்த ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.

- எல். முருகராஜ்






      Dinamalar
      Follow us