PUBLISHED ON : செப் 05, 2016

டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 5
'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற தொடரில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பது ஆசிரியர்கள்! எழுத்தறிவிக்கும் அவர்கள்தான், சிறந்த வழிகாட்டிகளாக இருந்து, கல்வி போதித்து, நம் திறமைகளை நமக்குப் புரிய வைக்கிறார்கள்! அதனால்தான், அவர்களுடைய பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession) என்கிறோம்.
'அ... ஆ...' என்று கைபிடித்து எழுதப் பழக்கியவர்கள்; தவறாகப் பெயர் எழுதும்போது திருத்தியவர்கள்; சில சமயம் காதைப் பிடித்துத் திருகி கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் நம்முடைய ஆசிரியர்கள்! அவர்களைப் போற்றும் விதமாக இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்த பேராசிரியர், டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை, இந்திய ஆசிரியர் தினமாக (Teachers' day) செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடுகிறோம்.
திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். பேராசிரியராகவும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும் இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றினார். மேலை நாடுகளின் சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகவும் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார். 'இந்திய தத்துவம்' என்கிற படைப்பை 1923ல் வெளியிட்டார். இந்தப் புத்தகம், பாரம்பரியத் தத்துவ இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைத் தேடி பல விருதுகள் வந்தன. இவருக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களின் எண்ணிக்கை 133!
ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும் தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. தமிழக அரசு, 1997ஆம் ஆண்டு முதல், நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.
தாயும் தந்தையும் இதுதான் உலகமென்று நமக்குக் காட்டுகிறார்கள். ஆனால், ஓர் ஆசிரியரால் மட்டுமே நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்ட முடியும்! யாரிடம் இருந்தெல்லாம் நாம் கற்றுக்கொள்கிறோமோ அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள்தான்!
* 1975: ஏப்ரல் 17ல் மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
* 1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1954: 'பாரத ரத்னா' விருது பெற்றார்.
* 1962: இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
