PUBLISHED ON : செப் 05, 2016

சங்கப் புலவர்களில் புகழ் மிக்கவர் கபிலர். மலையும் மலை சார்ந்த இயற்கைச் சூழலையும் பற்றி அருமையாக எழுதக் கூடியவர். அதனால் 'குறிஞ்சிக் கபிலர்' என்று போற்றப்படுகிறார்.
பல மன்னர்களைப் பற்றி இவர் பாடி இருந்தாலும், பாரி என்ற மன்னன் மீது மிகுந்த அன்பும் நட்பும் கொண்டிருந்தார்.
பாரியின் பறம்பு மலை, மிகுந்த செல்வச் செழிப்பு உடையது. பாரியின் புகழ், சேர, சோழ, பாண்டியர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் பறம்புமலை மீது படையெடுத்து வந்தனர். மூவேந்தர்களும் பெரும்படையுடன் வந்து நாட்டை முற்றுகையிட்டு நிற்பது பாரிக்குக் கவலை அளித்தது. மன்னனின் கவலை அவரது நண்பரான கபிலருக்கும் தொற்றியது. அவர் மூவேந்தர்களைப் பார்த்து, 'நீங்கள் படையெடுத்து வராமல் பரிசாக வந்து கேட்டிருந்தால் நாட்டையே கொடுத்து இருப்பான் பாரி' என்று கவிதை எழுதினார்.
போரில் பாரி இறந்த பிறகு, தங்களைக் கேலி செய்து கவிதை எழுதிய கபிலரை மூவேந்தர்கள் நாடு கடத்தினர். கபிலர் பாரியின் இரு மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் அழைத்துக்கொண்டு வேறு நாட்டிற்குச் சென்றார். அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் மூவேந்தர்களுக்குப் பயந்து, எந்த அரசரும் பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை.
திருக்கோவிலூரில் ஓர் அந்தணரிடம், ஔவையார் வந்தால் அவரிடம் ஒப்படைக்கச் சொல்லி, பாரி மகளிரை அவர் பொறுப்பில் ஒப்படைத்தார் கபிலர். இறுதியில், பெண்ணையாற்றில் இருந்த ஒரு குன்றின் மீதேறி அமர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தார் கபிலர்.
இவருடைய பெயரைப் பாரி தன் ஊர் ஒன்றிக்குப் பெயராக வைத்திருந்ததை, 'கபிலநெடுநகர்' என்று புறநானூற்று (337) பாடல் குறிப்பிட்டுள்ளது.
கபிலர் என்ற பெயரில் கபில முனிவர், தொல் கபிலர், கபில தேவ நாயனார் என்று வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள்.
