PUBLISHED ON : ஜூலை 09, 2018

நாணயங்கள், தபால் தலைகள் போன்றவற்றைச் சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இங்கிலாந்தின் லிமிங்டன் (Lymington) நகரைச் சேர்ந்த ஜோஷ் எனும் பதின்மூன்று வயதுச் சிறுவன் உலகின் பல நாடுகளின் கொடிகளைச் சேகரிப்பதோடு தினம் ஒரு கொடி வீதம் தன் வீட்டு முன்னாலிருக்கும் கொடிக் கம்பத்தில் ஏற்றி மகிழ்கிறான்.
ஆட்டிச நிலையாளரான ஜோஷுக்கு, சிறுவயது முதலே வண்ணங்களின் மீது ஆர்வம் இருந்தது. கற்றுக்கொடுத்தலில் ஒருபகுதியாக பல நாட்டுக்கொடிகளை அவருக்கு அறிமுகப்படுத்த, அதையே தனது பிடித்தமான சேகரிப்பாக மாற்றி இருக்கிறான்.
தனது அழுத்தங்களுக்கும், பதற்றத்திற்கும் வடிகாலாகத் தேர்ந்தெடுத்ததுதான் இந்த தினசரி கொடியேற்றம். இவரது சேகரிப்பில் 60 நாடுகளின் கொடிகள் உள்ளன. அதில் பூடானின் (Bhutan) கொடிதான் தனக்கு மிகவும் பிடித்தது என்றும், அதற்கு அக்கொடியில் இருக்கும் டிராகன்தான் காரணம் என்றும் கூறுகிறான் ஜோஷ். இன்று ஒரு புதிய நாள், இன்று என்ன கொடியேற்றலாம் என்று யோசித்தவாறு எழ முடிவது தனக்கு உற்சாகம் அளிப்பதாகக் கூறும் இச்சிறுவன், ஒரு கொடி என்பது அதற்கு பின்னாலிருக்கும் நாட்டின் குறியீடு என்றும் விளக்குகிறான்.
ஆரம்பத்தில் ஆட்டிச நிலையால் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கை சமன்படுத்த ஏற்பட்ட இந்தக் கொடி சேகரிப்புப் பழக்கத்தின் மூலமாகவே நாடுகள், அவற்றின் தலைநகரம், அங்குள்ள அரசியல் சூழல், அந்நாட்டைப் பற்றிய முக்கிய விவரங்கள் போன்ற பொது அறிவுத்தகவல்களையும் ஜோஷிற்கு பயிற்றுவித்ததாக அவரது தாய் கூறுகிறார்.
ஏதேனும் உலகக் கோப்பை போட்டிக்காக இவ்வாறு கொடியேற்றுகிறீர்களா என்று விசாரித்த அக்கம்பக்கத்தார், ஜோஷின் மனநிலை புரிந்தவுடன் அவரை உற்சாகப்படுத்துவதாகவும் தெரிவிக்கிறார். ஜோஷ் பற்றிய செய்திகளை உள்ளூர்வாசிகளின் முகநூல் குழுமத்தில் பதிவதன் மூலம் அவரை அதிகமானவர்கள் பின் தொடர்வதாகவும், இன்றைய கொடி என்ன என்ற விசாரிப்புகள் அதிகரித்து வருவதாகவும் பெருமையுடன் கூறுகிறார் ஜோஷின் தாய்.
