PUBLISHED ON : ஜன 01, 2018

கபில்தேவ்
பிறந்த நாள்: 6.1.1959
சண்டிகர், பஞ்சாப்
இங்கிலாந்தின், லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. 60 ஓவர்கள் கொண்ட அந்தப் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் அதிவேகப் பந்து வீச்சுகளைச் சமாளிக்க முடியாத இந்திய அணி, 54.4 ஓவர்களில், 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், தோற்றுவிடுவோம் என்று இந்திய அணி வீரர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்திருந்தனர்.
'முயற்சிப்போம்; நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்; நமக்கு இழக்க எதுவுமில்லை; முயன்றால் உலகக் கோப்பை நமக்கு இருக்கிறது!' என்று கபில் நம்பிக்கை ஊட்டினார். அந்த நம்பிக்கைதான், கடைசியில் ஜெயித்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று, உலகக் கோப்பையை ஏந்தியது. இதற்கு முக்கியக் காரணமாக கபில் திகழ்ந்தார். காலிறுதிக்கு முந்தைய போட்டியில், ஒற்றை ஆளாக நின்று ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினார். போர்க்களத்தில் முன் நின்று போராடும் படைத் தலைவன் போல் நிதானமாக விளையாடி, அவுட் ஆகாமல் 175 ரன்கள் குவித்து உலகச் சாதனை படைத்தார்!
சிறு வயதில் பந்து எடுத்துப் போட்டதில் இருந்து தொடங்கியது இவரது கிரிக்கெட் வரலாறு. அதில் சிறப்பாக விளையாடிய இவர், ஹரியாணா அணியின் நிரந்தர ஆட்டக்காரராகி 'ஹரியாணா புயல்' என்கிற பெயரெடுத்தார். அதன் பிறகு, பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆல்ரவுண்டராக முத்திரை பதித்தார். 25 ஆட்டங்களில் 100 விக்கெட், 1,000 ரன்கள் எடுத்த இளம் ஆல்ரவுண்டர் என்ற பெருமையையும் பெற்று, இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். 1994இல் ஓய்வுபெற்று, இந்திய அணியின் பயிற்சியாளராக சிறிது காலம் இருந்தார்.
திறமையை நம்பி முயற்சி செய்தால், எந்த இடத்தையும் அடையலாம், அதில் வெற்றியும் பெறலாம், முன்னுதாரணமாகவும் திகழலாம் என்று தன் ஆளுமையின் மூலம் நிரூபித்திருக்கும் கபில்தேவ், கிரிக்கெட் உலகில் அழியாத வரலாற்றைப் பெற்றிருக்கிறார்.
விருதுகள்:
1980: அர்ஜுனா
1982: பத்மஸ்ரீ
1991: பத்மபூஷண்
சாதனைகள்:
போட்டி- விக்கெட் - ரன்கள்
டெஸ்ட் - 434 - 5,248
ஒருநாள் - 253 - 3,783
